மும்பை: மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் பிரித்து மேய்ந்து விட்டனர். குறிப்பாக ஏப் டிவில்லியர்ஸ் மிகப் பிரமாதமாக ஆடியதால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 235 ரன்களைக் குவித்தது.
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது பெங்களூர். அபாயகரமான கிறிஸ் கெய்ல் முதல் ஆளாக அவுட்டாகி மும்பைக்கு நிம்மதியளித்தார். அதிரடியாக ஆட ஆரம்பித்த கெய்ல், மலிங்கா பந்து வீச்சில் லென்டில் சிம்மன்ஸிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார் கெய்ல்.

இதையடுத்து கோஹ்லியும், ஏப் டிவில்லியர்ஸும் இணைந்தனர். இந்த ஜோடி அதி வேகமாக ரன்களைக் குவித்தது. குறிப்பாக டிவி்ல்லியர்ஸ் மும்பை பந்து வீச்சை பிரித்து மேய்ந்து விட்டார்.
கெய்ல் போல பேயாட்டம் போட்ட அவர் 59 பந்துகளில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 133 ரன்களைக் குவித்து அசத்தினார்.
மறுபக்கம் கேப்டன் கோஹ்லியும் ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 82 ரன்களைக் குவித்தார்.
இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று ஆடியதால் பெங்களூர் அணி மிகப் பெரிய ஸ்கோரை எட்டியது. 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 235 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.
இந்தப் போட்டி மும்பை இந்தியன்ஸுக்கும், பெங்களூரு அணிக்கும் முக்கியமானது. 11 போட்டிகளில் ஆடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் உள்ளது. ஆரம்பத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த அந்த அணி கடைசி 5 போட்டிகளில் வென்றுள்ளது. இன்றைய போட்டியில் வென்றால் அது பிளே ஆப் பிரிவுக்குத் தகுதி பெறும்.
மறுபக்கம், 10 போட்டிகளில் ஆடி 11 புள்ளிகளுடன் உள்ள பெங்களூரு அணிக்கு இந்தப் போட்டியிலும், அடுத்து வரும் 3 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.