
ராஜஸ்தான் பவுலிங்
டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் வாட்சன் முதலில் பந்து வீச தீர்மானித்தார். இதையடுத்து கேப்டன் டேவிட் வார்னரும், ஷிகர் தவானும் ஹைதராபாத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். சுழற்பந்து வீச்சாளர் தீபக் ஹூடா வீசிய முதல் ஓவரிலேயே தவான்-வார்னர் ஜோடி 3 பவுண்டரியுடன் கணக்கை தொடங்கியது. முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்து அணிக்கு நல்ல தொடக்கம் ஏற்படுத்தி தந்தனர். வார்னர் 24 ரன்களில் (18 பந்து, 5 பவுண்டரி) விக்கெட் கீப்பர் சாம்சனிடம் பிடிபட்டார்.

மோர்கன் அபாரம்
அடுத்து வந்த ஹென்ரிக்ஸ் 20 ரன்களுடன் (21 பந்து, 3 பவுண்டரி) வெளியேற்றப்பட்டார். மறுமுனையில் ஷிகர் தவான் நிலைத்து நின்று விளையாடினார். ஆனால் 3-வது விக்கெட்டுக்கு இயான் மோர்கன் களம் இறங்கிய பிறகே ஸ்கோர் சூடுபிடித்தது. அவர் வாட்சன், தாம்பே, கிறிஸ் மோரிசின் ஓவர்களை நொறுக்கித்தள்ளினார். இதனால் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கிடையே தவான் 54 ரன்களில் (35 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) கிளீன் போல்டு ஆனார். என்றாலும் மோர்கனின் அசுர வேகத்தால் ஹைதராபாத்தின் ரன்விகிதம் துளியும் குறையவில்லை. இறுதியில் மோர்கன் 63 ரன்களில் (28 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் நடுக்கம்
பின்னர் இமாலய இலக்கை நோக்கி இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பம் ஆட்டம் கண்டது. ரஹானே 8 ரன்னிலும், கேப்டன் வாட்சன் 12 ரன்னிலும் நடையை கட்டினர்.
ராஜஸ்தான் அணி 77 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.

ஸ்மித், பவுல்க்னர் அபாரம்
இந்த சூழலில் ஸ்டீவன் சுமித்துடன், ஜேம்ஸ் பவுல்க்னெர் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியை தூக்கி நிறுத்தினர். ஸ்கோர் 121 ரன்களை எட்டிய போது, ஸ்டீவன் சுமித் 68 ரன்களில் (40 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) ரவி போபராவின் பந்து வீச்சில் வீழ்ந்தார். இது தான் ஆட்டத்தின் திருப்பு முனை. சிறிது நேரத்தில் பவுல்க்னெர் 30 ரன்களில் (19 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆக, ஆட்டம் ஹைதராபாத் பக்கம் திரும்பியது.

கடைசி ஓவரில் 18 ரன் தேவை
கடைசி 3 ஓவர்களில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 57 ரன்கள் தேவைப்பட்டன. ஹைதராபாத் அணி எளிதில் வெற்றிக்கனியை பறித்து விடும் என்றே தோன்றியது. ஆனால் பிரவீன்குமார் வீசிய 19வது ஓவரில் கிறிஸ் மோரிஸ் ‘ஹாட்ரிக்' சிக்சர் பறக்க விட்டார். இதனால் திடீரென ராஜஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு உருவானது. கடைசி ஓவரில் அந்த அணிக்கு 18 ரன்கள் தேவையாக இருந்தது.

புவனேஷ்வர் குமார் அசத்தல்
ஆனால் 20வது ஓவரை வீசிய புவனேஷ்வர்குமார் சாதுர்யமாக பந்து வீசி 10 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ராஜஸ்தானின் கனவுக்கு முட்டுக்கட்டை போட்டார். 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 7 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி திரில் வெற்றியை பெற்றது.


Click it and Unblock the Notifications











