மும்பை: 2016ல் நடக்கும் 9வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்குப் பதில் புதிய அணிகள் தற்காலிகமாக இடம் பெறும் என்றும், 2018ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸும், ராஜஸ்தானும் போட்டிக்குத் திரும்பும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறும் 9வது ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகளுடன் போட்டிகள் நடைபெறும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுதொடர்பான முடிவு இன்று மும்பையில் நடந்த கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இதுகுறித்து பிசிசிஐ அறிக்கை கூறுகையில், நீதிபதி லோதா கமிட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்துள்ளது. எனவே 2016 மற்றும் 2017 ஆகிய இரு ஆண்டுகளில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் இந்த அணிகள் இடம் பெறாது.
இதற்குப் பதில் புதிதாக இரண்டு அணிகள் தேர்வு செய்யப்படும். அவை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்குப் பதில் 2 ஆண்டுகளுக்கு விளையாடும்.
ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நீக்கப்படாது. மாறாக அவை 2018ம் ஆண்டு தடை முடிந்ததும் விளையாட அனுமதிக்கப்படும்.
2016 மற்றும் 2017 தொடர்கள் 8 அணிகளுடன் நடைபெறும். 2018 முதல் 10 அணிகள் கொண்டதாக தொடர் மாறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.