அட்டகாசமான ஹாட்ரிக் வெற்றி.. தொடர்ந்து சீறிப் பாயும் குஜராத் லயன்ஸ்
மும்பை: புதுமுக அணியான குஜராத் லயன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பட்டையைக் கிளப்பி வருகிறது. முதல் இரு போட்டிகளை ஜஸ்ட் லைக் தட் வென்ற குஜராத் அணி நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியையும் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை ஈட்டியுள்ளது.
3 விக்கெட் வித்தியாசத்தில் நேற்று நடந்த திரில் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணி வெற்றி பெற்று அசத்தியது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது.
பின்னர் ஆடிய குஜராத் லயன்ஸ் அணி கடைசி பந்தில் தனது வெற்றி இலக்கை எட்டியது, 7 விக்கெட்களை இழந்து. அந்த அணியின் ஆரோன் பின்ச் வழக்கம் போல அதிரடியாக ஆடி 67 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

3வது வெற்றி
நடப்புத் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கு இது 3வது தொடர்ச்சியான வெற்றியாகும். புதுமுக அணியான குஜராத் ரெய்னா தலைமையில் பட்டையைக் கிளப்பி வருகிறது.

பட்டையைக் கிளப்பும் ஆட்டம்
பேட்டிங் மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் பட்டையைக் கிளப்பி வருகிறது குஜராத் அணி. குறிப்பாக வயதான பந்து வீச்சாளர் பிரவீன் தாம்பே வழக்கம் போல கலக்கலாக பந்து வீசி வருகிறார். நேற்றும் கூட அவர் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களைச் சாய்த்தார்.

வேயன் பிராவோ, தவல் குல்கர்னி
அதேபோல வேயன் பிராவோ, தவல் குல்கர்னி ஆகியோரும் தலா 2 விக்கெட்களைச் சாய்த்து மும்பை இந்தியன்ஸை நிலை குலையச் செய்தனர்.

சொதப்பிய ரோஹித், பாண்ட்யா
மும்பை கேப்டன் ரோஹித் சர்மா 7 ரன்களில் வீழ்ந்து ஏமாற்றினார். அதேபோல ஹர்திக் பாண்ட்யா 2 ரன்களில் விழுந்து சொதப்பினார்.

சீட்டுக்கட்டு போல சரிந்த விக்கெட்கள்
மும்பை அணி உள்ளூர் மைதானத்தில் விளையாடியபோதும் கூட விக்கெட்களை வெகு எளிதாக பறி கொடுத்தது. பார்த்திவ் படேல் மட்டுமே தாக்குப் பிடித்து ஆடினார். அவர் இல்லாவிட்டால் 100 ரன்களைக் கூட மும்பை தாண்டியிருக்காது.

கடைசி நேரத்தில் கை கொடுத்த செளதீ
கடைசி நேரத்தில் செளதீ 25, கிருனாள் பாண்ட்யா ஆகியோர் சற்றை கை கொடுத்து தூக்கி விட்டதால் 140 ரன்களைத் தாண்ட முடிந்தது மும்பையால்.


Click it and Unblock the Notifications