ஹைதராபாத்: ஐ.பி.எல். தொடரின் லீக் ஆட்டத்தில் நேற்று மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
9வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் நடந்த நேற்றைய போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
டாசில் வென்ற வார்னர் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து பேட் செய்த மும்பை அணியில் மார்ட்டின் கப்டிலும், பார்த்தீவ் படேலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கப்டில் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு அம்பதி ராயுடு, கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டார். ஆனால் 5 ரன்கள் எடுத்திருந்த போது ரோகித் சர்மா ரன் அவுட் ஆனார். இதன் பிறகு களமிறங்கிய ஜோஸ் பட்லர் 11 ரன்களில் ஆட்டமிழந்ததை அடுத்து குணால் பாண்ட்யா களமிறங்கினார்.
தவான் கேட்ச்சை விட்டதால் தப்பிப் பிழைத்த குணால் பாண்ட்யா அதே ஓவரில் 3 சிக்ஸ் அடித்து மும்பை அணிக்கு உற்சாகத்தை தந்தார். சிறப்பாக ஆடிய அம்பதி ராயுடு 49 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து சரண் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இறுதி கட்ட ஓவர்களில் ஹைதராபாத் அணி அதிக ரன்களை விட்டுக் கொடுக்காததால், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது. குணால் பாண்ட்யா 28 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் தரப்பில் பாரிந்தர் சரண் 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஹைதராபாத். ஷிகர் தவான் (2), ஹென்ரிக்ஸ் (20), மார்கன் (11) ஏமாற்றினர். அரைசதம் கடந்த வார்னர், சிக்சர்களாக விளாச, ஹைதராபாத் அணி 17.3 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 145 ரன் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. வார்னர் (90), ஹூடா (17) ரன்களுடன் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.