மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்ப்ரிட் பும்ரா சிறப்பாக பந்து வீசுவதாக நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளருமான ஷேன் பாண்ட் தெரிவித்தார்.
ஐபிஎல் சீசன்-9 நாளை தொடங்க உள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும், ரைசிங் புனே சூப்பர் ஜியாண்ட் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இதுகுறித்துஷேன் பாண்ட் கூறியதாவது: உலக கோப்பை டி20 தொடரில் பும்ராவின் பந்து வீச்சு, அவரது சிறந்த பந்து வீச்சுகளில் ஒன்றாகும். இந்த திறமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகுந்த பலன் அளிக்கும்.
பகுத்தாயும் டெக்னாலஜி நடைமுறை உள்ள இக்காலகட்டத்தில், பவுலர்களை, எளிதாக பேட்ஸ்மேன்களால் எதிர்கொள்ள முடியும். பவுலர்கள் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்ய வேண்டியது அவசியமாகிறது. இந்த வகையில் தொடர்ச்சியாக பும்ரா சிறப்பாக பந்து வீசிவருகிறார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு பிறகு முட்டி காயத்தால் அவதிப்பட்ட பும்ரா, அதன்பிறகு சிறப்பாக பயிற்சி பெற்று, டி20 போட்டிகளில் ஜொலிக்க ஆரம்பித்துள்ளார். இவ்வாறு ஷேன் பாண்ட் தெரிவித்தார்.