கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 32-வது லீக் ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.
கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் முரளி விஜய் முதலில் பந்து வீச முடிவு செய்தார். கொல்கத்தாவிற்கு தொடக்க வீரர்களான காம்பீரும், உத்தப்பாவும் சிறப்பான தொடக்கம் தந்தனர். அந்த அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 164 ரன்கள் குவித்தது.

காம்பீர் 54 ரன்கள் எடுத்த போது அவரை மேக்ஸ்வெல் ரன் அவுட் செய்தார். 70 ரன் எடுத்திருந்த உத்தப்பாவும் மோகித் சர்மாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். அவர் 49 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்தார். இறுதி கட்டத்தில் ரசலும், யூசப் பதான் ஜோடி 35 ரன்கள் சேர்த்தனர். 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது.
ஆரம்பத்திலேயே பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சியான தொடக்கம் காத்திருந்தது. 3.1 ஓவரில் விஜய் (6), மார்கஸ் ஸ்டோனிஸ் (0), வோரா(0) ஆகிய மூன்று விக்கெட்களை இழந்து பஞ்சாப் தடுமாறியது. ஆனால் இதன் பிறகு களமிறங்கிய சகாவும், மேக்ஸ்வெலும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
சாக 24 ரன்கள் எடுத்திருந்த போது சாவ்லா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நின்ற மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் களமிறங்கிய அக்ஷார் படேல் 7 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த போதும் பஞ்சாப் அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை.
20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியில் கொல்கத்தா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கொல்கத்தா தரப்பில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்திய ஆந்த்ரே ரசல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா, 6-வது வெற்றியைப் பதிவு செய்ததோடு புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.