டெல்லி: ஐ.பி.எல். தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பஞ்சாப் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் மில்லர் நீக்கப்பட்டு புதிய கேப்டனாக தமிழக வீரர் முரளி விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
9-வது ஐபிஎல் சீசனில் டேவிட் மில்லர் தலைமையில் களமிறங்கியிருக்கும் பஞ்சாப் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியபோதிலும், ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலிலும் கடைசி இடத்தில் உள்ளது. இதனை அடுத்து கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் மில்லர் நீக்கப்பட்டுள்ளார்.

2016-ம் ஆண்டுக்கான பஞ்சாப் அணியின் கேப்டனாக சில மாதங்களுக்கு முன்பு டேவிட் மில்லர் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையில் இயங்கிய பஞ்சாப் அணி சொல்லிக் கொள்ளும் அளவில் விளையாட வில்லை. அந்த அணியின் பேட்டிங்கும் மிக மோசமாக இருந்ததால் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது.
இந்த சீசனில் 6 ஆட்டங்களில் விளையாடி மில்லர் 76 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்துள்ள பஞ்சாப் அணி நிர்வாகம் கேப்டனை மாற்றியுள்ளது. அவருக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டகாரர் முரளி விஜய் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தொடரில் சிறப்பாக ஆடி வரும் முரளி விஜய் 146 ரன்கள் குவித்துள்ளார். முரளி விஜய் தலைமையின் கீழ் பஞ்சாப் அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று அணி நிர்வாகம் எதிர்ப்பார்க்கிறது. டேவிட் மில்லர் தொடர்ந்து அணியில் நீடிப்பார் என்றும் பஞ்சாப் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் பாதியிலேயே கேப்டன்கள் மாற்றப்படுவது இது முதல்முறையல்ல. ஆடம் கில்கிறிஸ்ட் (2009, பஞ்சாப்), ரிக்கி பாண்டிங் (2013, மும்பை), டேனியல் வெட்டோரி (2012, பெங்களூர்) குமார் சங்ககாரா (2012, ஹைதராபாத்), ஏஞ்செலோ மேத்யூஸ் (2013, சஹாரா) ஆகியோர் தொடரின் பாதியிலேயே மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.