விசாகப்பட்டினம்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் புனே அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விசாகப்பட்டினத்தில் நடந்த 49 லீக் போட்டியில் டாஸ் வென்ற புனே கேப்டன் டோணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை மட்டுமே சேர்த்தது.

டெல்லி அணியை தொடர்ந்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் புனே அணி களமிறங்கியது. கவாஜாவும், ரகானேவும் புனே அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர். 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்த கவாஜா மோரிஸ் பந்து வீச்சில் அவுட் ஆகினார்.
இதன் பின்னர் ரகானேவுடன் பெய்லி ஜோடி சேர்ந்தார். புனே அணி 8.2 ஓவர்களில் 57 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறிக்கிட்டது. இதனை அடுத்து ஆட்டம் 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. மழை நின்றவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.
ஆனால் புனே அணி 11 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனை அடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி புனே அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ரகானே 42 ரன்களுடனும் பெய்லி 8 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தனர். 3 விக்கெட்களை வீழ்த்திய அசோக் திண்டா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ப்ளேஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் டெல்லி அணி மீதமிருக்கும் இரண்டு போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றிப் பெற வேண்டும்.