பெங்களூர்: ஐபிஎல் லீக் போட்டியில் நேற்று புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோஹ்லியின் அதிரடி சதத்தால் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடரின் நேற்றைய முதல் போட்டியில் பெங்களூர்- புனே அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராட் கோஹ்லி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி புனே அணி முதலில் பேட்டிங் செய்தது. ரகானே (74), சவுரப் திவாரி (52) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் புனே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணி சார்பில் வாட்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

புனேவை தொடர்ந்து பெங்களூர் அணிக்கு விராட் கோஹ்லி, லோகேஷ் ராகுல் களம் இறங்கினார்கள். ராகுல் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 3 பந்தில் 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது பெங்களூர் அணி 12 ஓவரில் 97 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது அந்த அணிக்கு ஒரு ஓவரில் 12 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது.
3-வது விக்கெட்டுக்கு விராட் கோஹ்லி வாட்சன் ஜோடி சேர்ந்தார். வாட்சன் புனே அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். அவர் 13 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 36 ரன்கள் குவித்தார். அப்போது பெங்களூர் அணியின் வெற்றிக்கு 27 பந்தில் 49 ரன்கள் தேவைப்பட்டது.
17-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் 7 ரன்கள் எடுத்தனர். இதனால் கடைசி 18 பந்தில் 40 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை ஆடம் சம்பா வீசினார். இந்த ஓவரில் கோஹ்லி இரண்டு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். இதனால் பெங்களூர் அணி இந்த ஓவரில் 18 ரன்கள் சேர்த்தது.
கடைசி இரண்டு ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை ஆர்.பி. சிங் வீசினார். இந்த ஓவரின் கடைசி இரண்டு பந்தில் இரண்டு சிக்சர் பறக்க விட்டார் கோஹ்லி. அத்துடன் 56 பந்தில் சதமும் அடித்தார். இந்த ஓவரில் 18 ரன்கள் கிடைத்ததால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
கடைசி ஓவரின் 3-வது பந்தை கோஹ்லி பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார். பெங்களூர் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.