ராஜ்கோட்: குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், பெங்களூரு அணி, 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 10-வது சீசனில் ராஜ்கோட்டில் நேற்று இரவு நடைபெற்ற 20-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ரெய்னா, முதலில் 'பீல்டிங்' தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயில் - விராட் கோஹ்லி களமிறங்கினர். இருவருமே குஜராத் பந்துவீச்சை சிதறிடித்தனர். இந்தக் கூட்டணியின் அதிரடியால் பெங்களூர் ரன் விகிதம் டாப் கியரில் உயர்ந்தது.
முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்திருந்த போது கெயில், பாசில் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அவர் 38 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்சர்கள் விளாசி 77 ரன்கள் குவித்தார். மேலும் டி20 போட்டிகளில் 10,000 ரன்களை கடந்தும் புதிய சாதனை படைத்தார் கெயில்.
இதையடுத்து கேப்டன் கோலி 50 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்சர் என 64 ரன்களும், ஹெட் 30 (16) ரன்களும், ஜாதவ் 38 (16) ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை எடுத்தது.
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஸ்மித் 1 ரன்னில் வெளியேறினார். மறுபுறத்தில் மெக்கல்லம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரெய்னா 8 பந்துகளில் 2 புண்டரி, 2 சிக்சர் என 23 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இதையடுத்து, பின்ஞ் 19 (15), டி கார்த்திக் 1 (4), ஜடேஜா 23 (22) ரன்களும் எடுத்து வெளியேற குஜராத் அணி தடுமாறியது. கடைசி நேரத்தில் கிஷான் 16 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் குஜராத் அணி 7 விக்கெட்டுக்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.