இந்தூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
10 வது ஐபிஎல் தொடர் லீக் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தூரில் இன்று நடைபெற்ற எட்டாவது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் வாட்சன் பேட்டிங் தேர்வு செய்தார். ஓபனிங் பேட்ஸ்மேனாக கேப்டன் வாட்சன், விஷ்ணு ஆகியோர் களம் இறங்கினார்கள். வாட்சன் 1 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினார். விஷ்ணு வினோத் 7 ரன்னில் வெளியேறினார்.
பின்னர் வந்த கேதர் ஜாதவ் (1), மந்தீப் சிங் (28) எடுத்த நிலையில் பெவுலியன் திரும்பினர். டி வில்லியர்ஸ் மட்டும் நிலைத்து நின்று ஆடி 46 பந்தில் 3 பவுண்டரி, 9 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார். பின்னி 18 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் ஆம்லா 38 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 58 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபக்கத்தில் கேப்டன் மேக்ஸ்வெல் 22 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசி 43 ரன்களுடன் களத்தில் இருந்தார்.