புனே: 8 அணிகள் இடையிலான 10வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. மே 21ம் தேதி வரை இந்தியாவில் 10 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.
ஐபிஎல் போட்டி தொடரில் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் வயிற்றில் ஏற்பட்ட பிரச்சினையால் விலகிவிட்டார்.

காயம் குணமடைய 6 முதல் 8 வாரங்கள் ஆகும் என்பதால், ஜூன் 1ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குள் அவர் உடல்தகுதி பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்வினுக்கு பதிலாக புனே அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது இளம் வீரரான வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தர் ஆல் ரவுண்டர் ஆவார். இடதுகை பேட்ஸ்மேனான இவர், வலது கையால் ஆப்-ஸ்பின் செய்யக் கூடியவர். 2014ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலக கோப்பை தொடரின்போது, 15 வயதான சுந்தரின் திறமை பலரையும் கவர்ந்தது.