ஐபிஎல் ஏலம்
இந்த ஐபிஎல் தொடருக்காக இவர் மிகவும் கடைசி நேரத்தில்தான் தேர்வானார். இவரை ராஜஸ்தான் அணி 7.2 கோடி கொடுத்து எடுத்தது. என்ன, யார் இந்த வீரர் இவருக்கு ஏன் இவ்வளவு பணம் கொடுத்து அணியில் எடுத்து இருக்கிறார்கள் என்று எல்லோரும் கேள்வி கேட்டு வந்தார்கள். பலருக்கு இவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது கூட தெரியாது. ஏனென்றால் ஆர்ச்சரின் வாழ்க்கையில் அவ்வளவு குழப்பங்கள்.
மேற்கிந்திய தீவுகள் அணி
இவர் மேற்கிந்திய தீவுகள் அணியில்தான் விளையாட வேண்டும் என்று இருந்தார். அந்த தீவில் குடியுரிமை கொண்ட இவர், உள்ளூர் அணிகளில் விளையாடி வந்தார். ஆனால் ஏற்கனவே பல குழப்பம் நிலவும் கேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகம் எல்லா முக்கிய வீரர்களையும் எப்படி புறக்கணித்து, தனக்கு தானே மண்ணள்ளி போட்டுக்கொண்டதோ அதே போல், ஆர்ச்சருக்கும் வாய்ப்பளிக்காமல் பிரச்சனை செய்து வந்தது.
மிக மோசம்
அப்போது ஆர்ச்சர் மிக உச்சக்கட்ட பார்மில் இருந்தார். ஆனால் அவருக்கு மேற்கிந்திய தீவுகளின் அண்டர் 19 அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் அப்போது அண்டர் 19 கோப்பையில் மேற்கிந்திய தீவுகள் சிறப்பாக விளையாடினாலும் பல முக்கிய கண்கள் ஆர்ச்சரர் எங்கே இருக்கிறார் என்றுதான் தேடியது. வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் ஆர்ச்சரர் உடனடியாக அங்கிருந்து வெளியேறி இங்கிலாந்து சென்றார்.
இங்கிலாந்து வந்தார்
அவரிடம் இங்கிலாந்து குடியுரிமை இருக்கிறது. ஆனாலும் இங்கிலாந்து விதிப்படி அவர் 7 வருடம் உள்ளூர் அணிகளில் விளையாட வேண்டும். இதற்காக அவர் தற்போது சில லீக்குகளில் விளையாடி வருகிறார். அதே சமயம் ஆஸ்திரேலியாவின் பிக் பாஸ் டி-20 லீக்கிலும் விளையாடி வருகிறார். இந்த தொடர் எல்லாவற்றிலும் கில்லி போல விளையாடும் வீரர் இவர்தான்.
காத்து இருக்க வேண்டும்
ஒரு கால்பந்து வீரரின் உடல்வாகில் இருக்கும் இந்த 22 வயதுக்காரர் 26 வயது வரை இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாட காத்திருக்க வேண்டும். இன்னும் 4 வருடங்கள் அவர் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை பார்ம் போகாமல் இருக்க அவர், இதுபோன்ற டி-20 லீக்குகளில் விளையாடி வருகிறார்.
வறுமையான வீடு
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், இந்த ஐபிஎல் தொடரிலும் ஆஸ்திரேலியாவின் பிக் பாஸ் டி-20 தொடரிலும் வரும் பணத்தை வைத்துதான் குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார். ஆனாலும் இதுவும் கூட அவர்களின் வறுமைக்கும், கடனுக்கும் போதவில்லை என்றுள்ளார். இந்த ஐபிஎல்லில் இன்னும் அதிக விக்கெட் எடுத்து, எல்லோருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று இவர் முடிவெடுத்துள்ளார்.