ரிஷாப் பேண்ட் சாதனை
பேண்ட் இந்த போட்டியில் எடுத்த 128 ரன்கள்தான் இந்த ஐபிஎல் சீசனில் அதிகபட்ச ரன் ஆகும். அதேபோல் டெல்லி வீரர் ஒருவர் எல்லா ஐபிஎல் தொடரிலும் எடுத்த அதிகபட்ச ரன் இதுதான். மேலும் ஹைதராபாத் அணிக்கு எதிராக எந்த வீரரும் இதுவரை இவ்வளவு ரன்கள் எடுத்தது இல்லை. கடைசியாக ஹைதராபாத் அணிக்கு எதிராக 2011ல் சேவாக் 119 ரன்கள் எடுத்தார்.
இளமை
தற்போது பேண்டிற்கு 20 வயது ஆகிறது. ஐபிஎல் தொடரில் சதம் அடித்த இரண்டாவது இளம் வீரர் இவர்தான் என்ற சாதனையை பெற்றுள்ளார். ஐபில் தொடரில் மிக குறைந்த வயதில் சதம் அடித்தது மனிஷ் பாண்டேதான் . 2009 ஐபிஎல் போட்டியில் அவர் 19 வயது இருக்கும் போது சதம் அடித்தார்.
1000 ரன்கள் அடித்தார்
அதேபோல் ஐபிஎல் தொடரில் 1000 ரன்கள் எடுத்த இளம் வீரர் இவர்தான். இதற்கு முன்பு சஞ்சு சாம்சன் 21 வயது நிரம்பி இருந்த போது 1000 ரன்கள் எடுத்து இருந்தார். தற்போது அந்த சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
ஒரே இந்தியர்
ஐபிஎல் போட்டி ஒன்றில் இந்தியர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன் இதுதான். 128 ரன்களை ஐபிஎல் போட்டியில் இதற்கு முன் எந்த இந்தியரும் எடுக்கவில்லை. இதற்கு முன்பு முரளி விஜய் 127 ரன்களை ராஜஸ்தான் அணிக்கு எதிராக 2010ல் சென்னை அணியில் விளையாடும் போது எடுத்தார்.
மோசமான சாதனை
இதில் இவர் மோசமான சாதனை ஒன்றையும் செய்துள்ளார். அதன்படி 128 ரன்கள் எடுத்த பின்பும் அவரது டெல்லி அணி தோல்வி அடைந்துள்ளது. ஒரு அணியில் உள்ள ஒரு வீரர் அதிக ரன் அடித்தும் அந்த அணி தோல்வி அடைவது இதுவே முதல்முறை. இதற்கு முன் ஆண்ட்ரு சைமன்ஸ் 117 ரன்களை ராஜஸ்தான் அணிக்காக எடுத்தார். ஆனாலும் அந்த அணி தோல்வி அடைந்தது.