வெளிநாட்டில் நடத்த ஏற்பாடுகள்
தற்போது வந்துள்ள புதிய செய்திகளின் அடிப்படையில் பிசிசிஐ ஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது. இது பற்றி அதிகாரப்பூர்வ செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.
விளையாட்டு அமைச்சகத்துடன் பேச்சு
விளையாட்டு அமைச்சக அதிகாரிகளை, பிசிசிஐ அதிகாரிகள் சந்தித்து பேசிய தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த சந்திப்பில் ஐபிஎல் தொடரை வேறு நாட்டில் நடத்துவது குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
கடந்த முறை
2009 மற்றும் 2014 பொதுத் தேர்தல் நடந்த சமயங்களில் ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடத்தப்பட்டது. 2009இல் தென்னாப்பிரிக்காவிலும், 2014இல் சில போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு நாட்டிலும் நடத்தப்பட்டது.
ஒளிபரப்பு நிறுவனம் எதிர்ப்பு
இந்த முறை ஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை பெற்றுள்ள ஸ்டார் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. ஒளிபரப்பு உபகரணங்களை வெளிநாட்டிற்கு எடுத்துச் சென்றால் அதிக செலவாகும் என்பதால் அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தது அந்த நிறுவனம்.
தேர்தல் தேதிகள் வரட்டும்
2019இன் ஐபிஎல் தொடர் 12வது சீசன் ஆகும். இந்த தொடர் மார்ச் 29 முதல் துவங்க உள்ளது. பொதுத் தேர்தல் தேதிகள் வரும் வரை காத்திருக்க முடிவு செய்துள்ள பிசிசிஐ, அதன் பின் ஐபிஎல் தொடர் எங்கே நடைபெறும் என்பதை அறிவிக்கும் என தெரிகிறது.