இலக்கு
இந்தப் போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை மைதானத்தில் 160க்கும் மேல் வெற்றி இலக்கு நிர்ணயித்தால், எளிதாக வெற்றி பெறலாம்.
பேட்டிங் மோசம்
ஆனால், சென்னை அணி துவக்கத்திலேயே மூன்று முன் வரிசை வீரர்களான டு ப்ளேசிஸ் 6, வாட்சன் 10, சுரேஷ் ரெய்னா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினர். பின்னர் முரளி விஜய் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். ராயுடு 42, தோனி 37 ரன்கள் எடுத்து அணியை ஓரளவு மீட்டனர். எனினும், இவர்களாலும் அதிரடியாக ரன் குவிக்க முடியவில்லை.
தோனி விளாசல்
ஐபிஎல் தொடரின் முக்கியமான தகுதிச்சுற்றுப் போட்டியில் தோல்வி அடைந்த பின், அதற்கான காரணம் குறித்து பேசிய தோனி, முதலில் ஆடுகளம் குறித்து பேசினார். பின்னர், பேட்ஸ்மேன்களை நாசூக்காக விளாசினார்.
சரியாக கணிக்கவில்லை
"சொந்த மைதானத்தில், இதே ஆடுகளத்தில் நாங்கள் 6-7 போட்டிகள் ஆடி விட்டோம். ஆடுகளத்தை நன்றாக புரிந்து கொண்டு இருக்க வேண்டும். அதுதான் சொந்த மைதானத்தில் ஆடுவதன் பயன். எங்களுக்கு ஆடுகளம் எப்படி இருக்கிறது.. என தெரிந்து இருக்க வேண்டும். பந்து எழும்பி வருகிறதா.. இல்லையா.. என்பதை சரியாக (பேட்டிங்கில்) கணிக்கவில்லை. பேட்டிங் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்க வேண்டும்"
நாங்கள் நம்பினோம்
"இவர்கள் தான் எங்களுக்கு கிடைத்த சிறந்த பேட்ஸ்மேன். நாங்கள் நன்றாக பேட்டிங் செய்வது போல உள்ளது. ஆனால், சில சமயம், சில போட்டிகளில் அவர்கள் ஆடக் கூடாத ஷாட்களை ஆடிவிடுகிறார்கள். இந்த வீரர்களை தான் நாங்கள் நம்பினோம், இவர்களுக்கு அனுபவம் உள்ளது, அவர்கள் சூழ்நிலையை சிறப்பாக புரிந்து கொண்டிருக்க வேண்டும்." என்றார் தோனி.