அதிரடி துவக்கம்
மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 187 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணிக்கு ரஹானே - பட்லர் அதிரடி துவக்கம் அளித்தனர். ரஹானே 37 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், பட்லர் தொடர்ந்து அதிரடி காட்டினார். சரியாக 10 ஓவர்கள் முடிவில் பட்லர் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
13வது ஓவரில் அதிரடி
அதன் பின்னரும் அதிரடி காட்டிய பட்லர் உச்சகட்டமாக 13வது ஓவரில் வெளுத்துக் கட்டினார். அவரிடம் வகையாக சிக்கியது மும்பை அணியின் வேகப் பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப். அந்த ஓவரின் 6 பந்துகளிலும் பவுண்டரி அடித்தார் பட்லர்.
ஆறு பவுண்டரி
முதல் மற்றும் கடைசி பந்தில் சிக்ஸ், இடையே நான்கு பந்துகளில் ஃபோர் என பட்லர் காட்டிய அதிரடியில் அல்சாரி ஜோசப் ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல், நிலை குலைந்து போனார். அந்த ஓவரில் மட்டும் 28 ரன்கள் கிடைத்தது.
தலைகீழ் மாற்றம்
12வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 48 பந்துகளில் 70 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஆனால், 13வது ஓவரின் முடிவில் 42 பந்துகளில் 42 ரன்கள் தேவை என்ற நிலைக்கு மாறியது ராஜஸ்தான்.
பட்லர் சென்ற பின்..
பட்லர் அடுத்த ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அப்போது அவர் 43 பந்துகளில் 89 ரன்கள் குவித்திருந்தார். பட்லர் சென்ற பின் ராஜஸ்தான் அணி கடைசி 4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து, தட்டுத் தடுமாறி வெற்றி பெற்றது. பட்லர் மட்டும் இல்லையென்றால் ராஜஸ்தான் மும்பை அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருக்கும்.