கடந்த தேர்தல்களில் மாற்றம்
கடந்த 2009 மற்றும் 2014 பொதுத் தேர்தல் நடந்த சமயங்களில் ஐபிஎல் தொடர் வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. பாதுகாப்பு காரணங்களால் மத்திய அரசு ஐபிஎல் போட்டிகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்ததாகவும் கூறப்பட்டது.
ஐபிஎல் 2019 இந்தியாவில் தான்
எனினும், 2019 பொதுத் தேர்தலில் மத்திய அரசுடன் பேசி இந்தியாவிலேயே போட்டி நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக கூறியுள்ளது பிசிசிஐ. இது வரை ஒவ்வொரு ஐபிஎல் அணிக்கும் ஒரு ஊர் என எட்டு ஊர்களில் மட்டுமே நடந்து வந்த ஐபிஎல் தொடர் இந்த ஆண்டில் 20 மைதானங்களில் பிரித்து நடத்தப்படும் என கூறப்படுகிறது.
போட்டி அட்டவணை மாற்றம்
ஓட்டெடுப்பு நடக்கும் மாநிலங்களில் அந்த நாளில் மட்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாத வகையில் போட்டி அட்டவணையை தயார் செய்ய உள்ளதாக பிசிசிஐ தெரிவித்து மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ளது.
லாபம் இழப்பு
இந்த திட்டத்திற்கு ஐபிஎல் அணிகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இதனால், அவர்களுக்கு சொந்த மைதானம் என்ற கூடுதல் வசதியும், அதில் இருந்து கிடைக்கும் டிக்கெட் கட்டண லாபமும் இழக்க நேரிடும்.
கூடுதல் செலவு ஆகும்
எனினும், வெளிநாட்டிற்கு செல்வதை விட இந்தியாவில் போட்டிகள் நடைபெற்றால் வெளிநாடு செல்வதற்கு ஆகும் கட்டணம் மற்றும் அங்கே ஏற்படும் கூடுதல் செலவுகளில் இருந்து தப்பிக்கலாம் என்பதால் ஐபிஎல் அணிகள் பிசிசிஐ-இன் புதிய திட்டத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
பொதுவான ஊர்கள்
இந்த புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு அணியும் தங்கள் ஊர்களில் குறைந்த பட்சம் மூன்று போட்டிகள் மட்டுமே பெறும். மற்ற போட்டிகள் இரு அணிகளுக்கும் பொதுவான ஊர்களில் நடைபெறும்.
புதிய இடங்கள் எவை?
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மொஹாலி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட எட்டு இடங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது புதிய இடங்களாக புனே, லக்னோ, கான்பூர், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், ராஞ்சி, கட்டாக், ராஜ்கோட், கௌஹாத்தி, ராய்ப்பூர், இந்தூர் மற்றும் தரம்சாலா ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளது.