தோனிக்கு ஆதரவாக குரல்
மும்பை இந்தியன்ஸ் போட்டியில் தோனி சொன்னது போல இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என தங்கள் தலைவன் தோனிக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். அந்த கருத்தை கடுமையாக விளாசி இருந்த ஸ்ரீகாந்தையும் புரட்டி எடுத்து பரபரப்பை கிளப்பினர்.
தோனி சொன்ன காரணம்
மும்பை போட்டிக்கு முன்னதாக சிஎஸ்கே அணி 10 போட்டிகளில் 7 தோல்விகளை சந்தித்து இருந்தது. அப்போது தோல்விகளுக்கு என்ன காரணம் என பேசிய தோனி, இளம் வீரர்களிடம் ஸ்பார்க் (உத்வேகம்) இல்லை என்பதால் வயதான வீரர்களை அணியில் பயன்படுத்தியதாக கூறினார்.
ஸ்பார்க் இருந்ததா?
ஆனால், சிஎஸ்கே அணியில் வயதான வீரர்கள் வரிசையில் ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ் போன்றோரும் மோசமாகவே ஆடி வரும் நிலையில் அவர்களிடம் ஸ்பார்க் இருந்ததா? என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது. அதைத் தான் முன்னாள் இந்திய அணி வீரர் ஸ்ரீகாந்த்தும் கேட்டிருந்தார்.
ஸ்ரீகாந்த் விளாசல்
ஸ்ரீகாந்த் தனது பாணியில் அதிரடியாக தோனியை நேரடியாக விளாசி இது பற்றி பேசி இருந்தார். ஜாதவ்விடம் ஸ்பார்க் இருந்ததா? தோனி பேசியதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது அவரது விமர்சனம் பரபரப்பை கிளப்பியது.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் போட்டியில் ஷேன் வாட்சன், ஜாதவ் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் ஜெகதீசன், ருதுராஜ் கெயிக்வாட் என அதிக வாய்ப்பு கிடைக்காத இளம் வீரர்கள் அணியில் இடம் பெற்றனர். இதை ரசிகர்கள் வரவேற்றனர்.
பெரும் அதிர்ச்சி
ஆனால், போட்டியில் அவர்கள் இருவரும் டக் அவுட் ஆனார்கள். இதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. வாய்ப்பு கிடைத்தும் அதை அந்த இளம் வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. அப்போது சிஎஸ்கே ரசிகர்கள் அதை வேறு மாதிரி பார்த்தார்கள்.
ஒரு அர்த்தம் இருக்கும்
தோனி சொன்னது போலவே இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என அவர்கள் கூறத் துவங்கினர். தோனி ஒரு ஜாம்பவான். அவர் எது கூறினாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என அவர்கள் தோனி புகழ் பாடத் துவங்கினர். அத்துடன் ஸ்ரீகாந்தும் சிக்கினார்.
எங்கே அந்த ஸ்ரீகாந்த்?
முந்தைய போட்டியில் ஸ்ரீகாந்த் தோனியின் ஸ்பார்க் இல்லை என்ற கருத்தை கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்த நிலையில், "எங்கே அந்த ஸ்ரீகாந்த்?" என கூக்குரல் இட்டு சமூக வலைதளங்களில் சில ரசிகர்கள் அவரை வறுத்து எடுத்தனர்.