
ஐபிஎல் போட்டிகள் ரத்து
கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள், கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தயாராக கங்குலி அறிவுறுத்தல்
இதனிடையே, ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டாலும், அதற்கான ஏற்பாடுகளில் அணிகள் ஈடுபட வேண்டும், தயாராக வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார். ஆயினும் பயிற்சி போட்டிகள் குறித்து தற்போதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

பயிற்சி துவக்கம்
இந்நிலையில் ஐபிஎல்லின் தற்போதைய சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, மும்பை கன்சோலியின் ரிலையன்ஸ் மைதானத்தில் தனது வீரர்களுக்கு பயிற்சி ஆட்டங்களை துவக்கியுள்ளது. இந்த பயிற்சிகள் கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் வசித்துவரும் கேப்டன் ரோகித் சர்மா, ஆல்-ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, பேட்ஸ்மேன்கள் சூர்யகுமார் யாதவ், ஆதித்யா தாரே மற்றும் பௌலர் தவால் குல்கர்னி ஆகியோருக்கு இந்த பயிற்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சூர்யகுமார் யாதவ் ஆவல்
இதனிடையே இந்த பயிற்சியில் பங்கேற்க தான் மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டரை மாதங்களாக தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வராத தனக்கு, மீண்டும் பேட்டை பிடித்து விளையாடுவது மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த முகாமில் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் சமூக விலகல் கடைபிடிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











