
பவுலிங்
ஆனால் சென்னை அணியின் பவுலிங் இன்று பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை. முக்கியமாக சிஎஸ்கேவிற்கு அதிக ஸ்விங் பந்துகளை போடும் சாகர் இன்று பந்தை ஸ்விங் செய்ய முடியாமல் திணறினார். அதோடு இவர் பந்தும் 130 கிமீக்கும் குறைவான வேகத்திலேயே வந்தது. இதனால் இவரின் ஓவரில் அதிக அளவில் ரன் சென்றது .

ரன் சென்றது
அதிலும் கொல்கத்தா அணிக்காக இன்று நீண்ட நாட்களுக்கு பின் ஓப்பனிங் களமிறங்கிய திரிபாதி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடினார். இதில் நிரூபித்தால்தான் ஓப்பனிங் இறங்க முடியும் என்று அதிரடியாக ஆடினார். அதிலும் சாகர் ஓவரில்தான் இவர் பவுண்டரிகளை பறக்கவிட்டார். இதனால் கொல்கத்தா அணியின் ரன் ரேட் ஓவருக்கு 10 என்று அதிகரித்தது.

மோசம்
இன்னொரு பக்கம் சுப்மான் கில்லும் ஷாட்அடிப்பதற்கு தயார் ஆகிக் கொண்டு இருந்தார். அப்போதுதான் தோனியின் முதல் ராஜதந்திரம் வேலை செய்தது. அதுவரை பவுலிங் செய்து வந்த சாம் கரனுக்கு ஓவர் கொடுக்காமல் திடீர் என்று சர்த்துல் தாக்கூருக்கு ஓவர் கொடுத்தார். சர்த்துல் வந்த இரண்டாவது பந்திலேயே சுப்மான் கில் அவுட்டானார். புல் லெந்தில் சர்த்துல் போட்ட பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

செம மாஸ்
அதன்பின்தான் தோனி தனது இரண்டாவது வீரரையும் களமிறக்கினார். சாவ்லாவிற்கு பதிலாக களமிறங்கிய கரன் சர்மா இன்று தொடக்கத்தில் இருந்து சிறப்பாக பந்து வீசினார். இவரின் முதல் ஓவரில் கொஞ்சம் ரன் சென்றாலும், அடுத்தடுத்து ரன்னை கட்டுப்படுத்தினார். இவரின் முதல் ஓவரில் 12 ரன்கள் கொடுத்தார். ஆனால் மீதம் உள்ள மூன்று ஓவரில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மொத்தமாக 4 ஓவரில் இவர் 25 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

விக்கெட் எடுத்தார்
கரன் சர்மா போட்ட 9வது ஓவரில் முதல் பந்தே நிதிஷ் ராணா விக்கெட்டை எடுத்தார். சாதாரண லெக் பிரேக் பந்தை கணிக்க முடியாமல் ராணா பந்தை பறக்கவிட்டார். ஆனால் பந்து ஸ்லோவாக இருந்ததால் ராணா அடித்த ஷாட் சிக்ஸ் செல்லாமல், ஜடேஜா கையில் சென்று சேர்ந்தது. அந்த ஓவரில் கரன் சர்மா 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

மீண்டும் விக்கெட்
அதன்பின் கரன் சர்மா போட்ட 11 வது ஓவரில் மீண்டும் நரேன் விக்கெட்டை எடுத்தார். சர்மா போட்ட கூக்ளி பந்தை நரேன் பறக்கவிட, அதை ஜடேஜா பவுண்டரி லைனில் பிடித்து டு பிளஸிஸிடம் கொடுத்தார். மொத்தமாக இதில் போட்டியே மாறியது. அந்த ஓவரில் 5 ரன்கள் கொடுத்த கரன் சர்மா, அடுத்த ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

முடிவு
இதன் மூலம் கரன் சர்மா தனது தேர்வு சரிதான் என்று நிரூபித்து இருக்கிறார். கரன் சர்மா இப்படி அணிக்குள் வந்து விக்கெட் எடுப்பார் என்று தினேஷ் கார்த்திக் நினைக்கவில்லை. சிஎஸ்கே அதே டீமுடன் இறங்கும் என்றுதான் தினேஷ் கார்த்திக் நினைத்தார். ஆனால் தினேஷ் கார்த்திக்குக்கு தோனி அதிர்ச்சி கொடுத்தார்.

வேறு என்ன
தோனி களமிறங்கிய இன்னொரு வீரர் மொத்தமாக ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். சரத்துல் தாக்கூர் கடைசி நேரத்தில் வந்து ரசல் விக்கெட்டையும் எடுத்தார். கடந்த இரண்டு போட்டிகள் போல இன்றும் இவரின் ஓவர் மிகவும் சிறப்பாக இருந்தது. மிக குறைந்த ரன்கள் கொடுத்து இரண்டு முக்கியமான விக்கெட்டை இன்று தாக்கூர் எடுத்தார்.

தோனி
அதோடு மிக முக்கியமாக இன்று தோனி ஓவரை மாற்றி மாற்றி கொடுத்த விதமும் சிறப்பாக இருந்தது. எப்போதும் யார் பவுலிங் செய்வார் என்று கணிக்க முடியாத அளவிற்கு தோனி ஓவர்களை மாற்றி மாற்றி கொடுத்தார். கொல்கத்தா ஒரு பக்கம் ரன் அடித்தாலும் கூட விக்கெட் விழவும், பெரிய பார்ட்னர்ஷிப் அமையாமல் இருக்கவும் தோனியின் ராஜதந்திரம் காரணமாக இருந்தது.


Click it and Unblock the Notifications