
தொடர் தோல்வி
தொடர் தோல்வி காரணமாக சிஎஸ்கே மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது. சிஎஸ்கேவின் தோல்விக்கு முதலில் தொடக்க பேட்ஸ்மேன் முரளி விஜய்தான் காரணம் என்ற கூறப்பட்டது. அதேபோல் அம்பதி ராயுடு, பிராவோ அணியில் இல்லாததும் தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டது. இதனால் கடந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் முக்கியமான மாற்றங்களை தோனி செய்தார்.

மாற்றம் என்ன
அதன்படி அணியில் இருந்து முரளி விஜய் நீக்கப்பட்டார். மாறாக டு பிளசிஸ், வாட்சன் ஓப்பனிங் இறங்கினார்கள். ருது ராஜ் நீக்கப்பட்டு ராயுடு உள்ளே வந்தார். இன்னொரு பக்கம் ஹசல்வுட் நீக்கப்பட்டு பிராவோ அணிக்குள் வந்தார். ஆனாலும் கடந்த போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. கடந்த போட்டியில் சிஎஸ்கேவின் தோல்விக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் சொல்லப்பட்டது.

காரணம் 1
சிஎஸ்கேவில் தொடக்க வீரர் வாட்சன் சரியாக ஆடாதது காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இவரை அணியில் இருந்து தோனி நீக்கமாட்டார் என்கிறார்கள். எப்போதும் போல வாட்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அவர் கண்டிப்பாக பார்மிற்கு திரும்புவார் என்று சிஎஸ்கே நிர்வாகமும், தோனியும் நம்புவதாக கூறுகிறார்கள். இதனால் கண்டிப்பாக வாட்சன் இன்று விளையாடுவார்.

காரணம் 2
சென்னை அணியின் தோல்விக்கு இன்னொரு முக்கிய காரணம் கேதார் ஜாதவ். இவர் சிஎஸ்கே அணிக்குள் ஏன் இருக்கிறார் என்பதே சந்தேகமாக இருக்கிறது. கடந்த 20 போட்டிகளாக இவர் சரியாக ஆடவில்லை. பவுலிங்கும் செய்வது இல்லை. இவரின் பீல்டிங்கும் மிக மோசமாக இருக்கிறது. இதனால் இவரை அணியில் இருந்து மொத்தமாக தூக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

இன்று நீக்கம்
இதனால் இன்று சிஎஸ்கே அணியில் கேதார் ஜாதவ் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். இவருக்கு நிறைய வாய்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் இவர் மாறவில்லை. அதனால் இவரை ஆடும் அணியில் இருந்து நீக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது என்கிறார்கள். இன்று நடக்கும் போட்டியில் கண்டிப்பாக கேதார் ஜாதவ் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

யார்
இவருக்கு மாற்றாக இரண்டு பேரை சிஎஸ்கே நிர்வாகம் மனதில் வைத்துள்ளது. ஒருவர் கர்ன் சர்மா. இன்னொருவர் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் நாராயண் ஜெகதீசன். இவர்கள் இருவரில் ஜெகதீசனுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அணியில் ஒரு இளம் வீரர் இருக்க வேண்டும் என்பதால் தற்போது ஜெகதீசனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











