
சென்னை தோல்வி
நேற்று நடந்த போட்டியிலும் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் சென்னை தோல்வி அடைந்தது. நேற்று டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவரில் ஹைதராபாத் நேற்று 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய சென்னை கடைசி வரை போராடி 157 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

பேட்டிங்
இந்த முறையும் சென்னை அணியில் பேட்டிங் மிக மோசமாக சொதப்பியது.ஓப்பனர் வாட்சன் எப்போதும் போல வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியே சென்றார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராயுடு நடராஜன் போட்ட பந்தில் எப்படி போல்டானார் என்பதே தெரியாத வகையில் போல்டானார். அதற்கு பின்தான் பேட்டிங் செய்ய வந்தார்.. சென்னையின் அதிரடி பேட்ஸ்மேன்.. கடந்த 16 ஐபிஎல் போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் 30+ அடித்த கேதார் ஜாதவ்.

டெஸ்ட்
ஜாதவ் இறங்கிய போதே பலரும் அடுத்த முரளி விஜய் களமிறங்கிவிட்டார் என்று கிண்டல் செய்தனர். அவரும் மிக மோசமாக டெஸ்ட் இன்னிங்ஸ் ஆட தொடங்கினார். ஒரு பக்கம் டு பிளசிஸ் நன்றாக ஆடினாலும் இன்னொரு பக்கம் ஜாதவ் கடுமையாக திணறினார். இன்னொரு பக்கம் டு பிளசிஸ் 4 பவுண்டரி அடித்து 20 ரன்களை கடந்து அதிரடியாக களத்தில் நின்றார்.

காயம்
நேற்று போட்டியின் போது டு பிளஸிஸுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் வேகமாக ஓட முடியவில்லை . சிங்கிள் எடுக்கவே சிரமப்பட்டார். ஆனாலும் காலில் காயத்துடன் இவர் தொடர்ந்து ஆடி வந்தார். காயம் காரணமாக ஓட முடியாது என்பதால் சிங்கிள் எடுப்பதை தவிர்த்து அதிரடி ஷாட்களை மட்டுமே ஆடி வந்தார்.

ஜாதவ்
பிளசிஸ் ஓட முடியாது என்பது ஜாதவிற்கு தெரியும். ஆனாலும் வேண்டும் என்றே அடுத்த ஓவரில் ஸ்டிரைக் எடுக்க ஆசைப்பட்டு 6வது கடைசி பாலில் ஜாதவ் சிங்கிள் எடுக்க முயன்றார். சில்லி மிட் ஆன் திசையில் லேசாக தட்டிவிட்டுவிட்டு ஜாதவ் ஓடினார். ஆனால் காலில் காயம் ஏற்பட்ட காரணத்தால் டு பிளசிஸ் ஓட முடியாமல் திணறினார்.

திணறல்
மிக மெதுவாகவே டு பிளசிஸ் நேற்று ஓடினார். காலில் காயம் காரணமாக நேற்று டு பிளசிஸ் ரன் அவுட்டானார். பிரியம் கார்க் எறிந்த துரோவை பிடித்து பிரைஸ்டோ ரன் அவுட் செய்தார்.டு பிளசிஸின் இந்த விக்கெட்டிற்கு முழுக்க முழுக்க காரணம் கேதார் ஜாதவ்தான். ஒருவேளை டு பிளசிஸ் விக்கெட் விழாமல் இருந்தால் சிஎஸ்கே தோல்வி அடைந்து இருக்காது.

போட்டி மாறியது
இந்த விக்கெட்தான் போட்டியை மொத்தமாக மாற்றியது. டு பிளசிஸ் ஆடி இருந்தால் சிஎஸ்கே வென்று இருக்க கூட வாய்ப்புள்ளது. டு பிளசிஸ் ஓட முடியாது என்று தெரிந்தும் அவரை அப்படி சிங்கிள் வர சொன்னது ஏன்? அதுவும் சில்லி மிட் ஆன் திசையில் அடித்துவிட்டு சிங்கிள் வர சொன்னது ஏன் என்று ஜாதாவிடம் பலரும் கடுமையாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











