
2020 ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு நடுவே நடந்தது. முதலில் இந்தியாவில் இருந்து ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. பின் முக்கிய ஸ்பான்சர்கள் விலகினர். அதை எல்லாம் சமாளித்து ஐபிஎல் தொடர் துவங்கியது.

பரிசுத் தொகை குறைப்பு
இந்த நிலையை முன்பே ஊகித்து பிசிசிஐ ஐபிஎல் தொடரில் வெற்றி பெறும் அணிகளுக்கான பரிசுப் பணத்தை மார்ச் மாதமே குறைத்து இருந்தது. கடந்த ஆண்டுகளில் கொடுக்கப்பட்டதை விட பாதி பணமே அணிகளுக்கு கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால், இந்த தகவல் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.

பெரிய வெற்றி
இந்த நிலையில், கடும் சிக்கலுக்கு நடுவே துவங்கிய 2020 ஐபிஎல் தொடர் இதுவரை இல்லாத அளவு மாபெரும் வெற்றி பெற்றது. டிஆர்பி ரேட்டிங் எகிறியது. பிசிசிஐ தலைவர் கங்குலி இதுகுறித்து மிகவும் பெருமையாக குறிப்பிட்டு இருந்தார்.

நம்பிய அணிகள்
இந்த நிலையில், பிசிசிஐ தனது மனதை மாற்றி ஐபிஎல் பரிசுப் பணத்தை கடந்த ஆண்டு அளவுக்கே கொடுக்கும் என ஐபிஎல் அணிகள் எதிர்பார்த்தன. அது ஐபிஎல் அணிகளுக்கு பெரிய தொகை இல்லாவிட்டாலும் இந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட உதவும் என எதிர்பார்த்தன.

பிசிசிஐ செய்த மாற்றம்.
இந்த நிலையில், பிசிசிஐ கடந்த ஐபிஎல் தொடரில் அளிக்கப்பட்ட அதே அளவு பரிசுத் தொகையை அளித்து வியக்க வைத்தது. இந்த முடிவை பலரும் எதிர்பார்க்கவில்லை. இறுதிப் போட்டி முடிந்து பரிசு வழங்கும் விழாவில் தான் இது பற்றி தெரிய வந்தது.

மும்பைக்கு 20 கோடி
2020 இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இருந்தது. தன் ஐந்தாவது ஐபிஎல் கோப்பை வென்று இருந்தது. கோப்பை வென்ற மும்பை அணிக்கு 20 கோடி பரிசு அளித்தது பிசிசிஐ. இரண்டாம் இடம் பிடித்த டெல்லி அணிக்கு 12.5 கோடி அளிக்கப்பட்டது.

ஐபிஎல் அணிகள் மகிழ்ச்சி
பிளே-ஆஃப் முன்னேறிய மற்ற இரு அணிகளுக்கும் கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட அதே அளவு பரிசுத் தொகை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ செயலால் ஐபிஎல் அணிகள் மகிழ்ச்சி அடைந்தன. இந்த சீசனில் ஏற்கனவே விளம்பர வருவாயில் இழப்பை சந்தித்துள்ள நிலையில், இந்த மாற்றம் அந்த அணிகளுக்கு உதவியாக அமைந்தது.

ஏன் இந்த மாற்றம்?
பிசிசிஐ திடீரென இந்த மாற்றத்தை செய்ய முக்கிய காரணம், இந்த சீசனின் மாபெரும் வெற்றி தான். எந்த சீசனிலும் இல்லாத அளவு இந்த சீசனில் டிஆர்பி ரேட்டிங் எகிறியது. இங்கிலாந்து நாட்டில் கால்பந்து தொடரை விட அதிகமாக ஐபிஎல் பார்த்தது பெரிய சாதனையாக அமைந்தது.

2021 ஐபிஎல்
மேலும், இன்னும் சில மாதங்களில் 2021 ஐபிஎல் தொடரை நடத்த உள்ளது பிசிசிஐ. எனவே, ஐபிஎல் அணிகளை உற்சாகப்படுத்தும் முயற்சியாக பரிசுப் பணத்தை குறைக்காமல் அப்படியே வழங்கியது. அடுத்த சீசனில் பரிசுப் பணத்தை பிசிசிஐ அதிகரிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications