உலகின் முன்னணி தொடர்
இந்தியன் பிரீமியர் லீக் எனும் ஐபிஎல் தொடர் உலகின் மிகப் பெரிய டி20 தொடராக கருதப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடரைக் காட்டிலும் இந்த தொடருக்கு எதிர்பார்ப்பு, ரசிகர்கள், வருமானம் என அனைத்தும் உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் அணிகள் அடுத்த கட்டத்திற்கு செல்ல திட்டமிட்டு வருகின்றன.
50 நாட்கள் மட்டுமே
தற்போது ஐபிஎல் தொடர் ஆண்டுக்கு சுமார் 50 நாட்கள் மட்டுமே நடத்தப்படுகிறது. மற்ற நாட்களில் போட்டிகள் இல்லை என்றாலும், ஐபிஎல் அணிகள் அடுத்த ஆண்டு வரை வருமானத்திற்கு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
வெளிநாட்டில் நடத்த வேண்டும்
இதை தவிர்க்க, மற்ற நாடுகளில் ஐபிஎல் தொடர் தவிர்த்து சில போட்டிகளில் ஆட அனுமதி அளித்தால், அது ஐபிஎல்-லுக்கு உலக அளவில் சந்தையை ஏற்படுத்தும் என சில அணிகள் பிசிசிஐ-யிடம் கூறி வருகின்றன. இது குறித்து பிசிசிஐ முந்தைய கூட்டத்தில் விவாதித்தாலும், அது குறித்து எதுவும் பேசவில்லை.
பிளே-ஆஃப் மட்டும்
இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரின் பிளே - ஆஃப் போட்டிக்கான அட்டவணை மட்டும் இன்னும் வெளியாகாத நிலையில், அந்த போட்டிகளை அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடத்த அனுமதிக்க வேண்டும் என சில ஐபிஎல் அணிகள் பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்துள்ளன.
20 சதவீத வருமானம்
இதன் மூலம், ஐபிஎல் அணிகளின் வருமானம் உயர்வதுடன், பிசிசிஐக்கும் அதில் 20 சதவீதம் பங்கு கிடைக்கும். எனவே, பிசிசிஐ இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அந்த ஐபிஎல் அணிகளின் நிர்வாகிகள், ஐபிஎல் தொடர்பான கூட்டத்தில் பேசி இருக்கின்றனர்.
எந்த அணிகள்?
மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் தான் வெளிநாடுகளில் போட்டி நடத்த வேண்டும் என விடாமல் கேட்டு வருவதாக பிசிசிஐ வட்டாரம் கூறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கனவே லண்டனில் பயிற்சிப் பள்ளி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ மவுனம்
பல முறை ஐபிஎல் அணிகள் வெளிநாடுகளில் போட்டி நடத்துவது பற்றி கேட்டு வந்தாலும், பிசிசிஐ மவுனம் சாதித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, மற்ற நாட்டு கிரிக்கெட் போர்டுகளுடன் இதனால் சிக்கல் வந்துவிடாமல் இருக்க வேண்டும் என பிசிசிஐ நினைப்பது தான் என்கிறார்கள்.