
காரணம்
நேற்று பஞ்சாப் வெற்றிக்கு கெயிலின் அதிரடி மட்டும் காரணம் என்று கூற முடியாது. கோலி எடுத்த தவறான பல முடிவுகளும் அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக இருந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் நேற்று கேப்டன் கோலி எடுத்த எல்லா முடிவுகளும் மிகவும் மோசமாக இருந்தது. ஒரு கேப்டனாக கோலி மிகவும் மோசமாகவே செயல்பட்டார்.

கேப்டன்
முக்கியமாக நேற்று நன்றாக பந்து வீசிய பவுலர்களின் ஓவர்களை கோலி டெத் ஓவர் போடும்போது பயன்படுத்தவில்லை. உதாரணமாக நேற்று சாஹல், உடனா இருவருக்கு ஓவர்கள் மிச்சம் இருந்தது. ஆனால் அவர்களின் ஓவர்களை பயன்படுத்தாமல், 16வது ஓவரை முகமது சிராஜுக்கு கொடுத்தார். அந்த ஓவரில் மொத்தம் 20 ரன்கள் சென்றது.

போட்டி மாறியது
அதுவரை ஆட்டம் பெங்களூர் கையில்தான் இருந்தது. கொஞ்சம் நெருக்கி பிடித்து இருந்தால் பெங்களூர் அணி வெற்றிபெற்று இருக்கும். சிராஜுக்கு ஓவர் கொடுத்து கோலி பெரிய தவறை செய்தார். கடைசியில் வந்த சாஹல் சிறப்பாக பந்து வீசினார். அவருக்கும் 16வது ஓவரை கோலி கொடுத்து இருந்தால் நேற்று பஞ்சாப் அணியை அடக்கி இருக்கலாம்.

வேறு என்ன
இதுபோல் நேற்று ஆட்டம் முழுக்க நிறைய தவறுகளை கோலி செய்தார். அதில் முக்கியமான தவறு டி வில்லியர்ஸை தாமதமாக பேட்டிங் செய்ய அனுப்பியது. 4வது இடத்தில் இறங்க வேண்டிய டி வில்லியர்ஸ் நேற்று 6வது இடத்தில் இறங்கினார். இதனால் அவரால் சரியாக ஆட முடியாமல், வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். டி வில்லியர்ஸ் முன்பே இறங்கி இருந்தால் பெங்களூர் கூடுதலாக 10-15 ரன்கள் அடித்திருக்க வாய்ப்புள்ளது.

ஏன் இப்படி
பேட்ஸ்மேன்கள் இடது - வலது காம்பினேஷனுக்காக டி வில்லியர்ஸ் கடைசியில் இறங்கினார் என்று கோலி விளக்கம் அளித்தார். ஆனால் ஸ்பின் பவுலிங்கில் டி வில்லியர்ஸ் அவுட் ஆகிவிடுவார் என்பதால்தான் கோலி டி வில்லியர்ஸை கடைசியில் இறக்கினார் என்றும் கூறுகிறார்கள். தமிழக வீரர் முருகன் அஸ்வின், ரவி பிஸ்னோய் இரண்டு பேரின் ஓவரில் டி வில்லியர்ஸ் நேற்று சொதப்புவார் என்று கணிக்கப்பட்டது.

கணிப்பு
இவர்கள் இருவரில் ஒருவர்.. முக்கியமாக முருகன் அஸ்வின்தான் டி வில்லியர்ஸ் விக்கெட்டை எடுப்பார் என்று கணிக்கப்பட்டது. இதனால் இவர்களின் ஓவர் முடியும் வரை காத்து இருந்து அதன்பின் டி வில்லியர்ஸை கோலி இறக்கிவிட்டார். ஆனால் பெங்களூருக்கு இது பயன் அளிக்கவில்லை. கடைசியில் இதுவே பெங்களூருக்கும் எதிராக மாறி உள்ளது. தற்போது இது பெங்களூரின் பிளே ஆப் கனவிலும் வேட்டு வைத்துள்ளது.

கனவு
இந்த சீசனில் மொக்கையான அணி என்று பார்த்தால் அது பஞ்சாப்தான். அந்த பஞ்சாப்பிடம் தற்போது பெங்களூர் வீழ்ந்துள்ளது. இனி வரும் போட்டிகளில் டெல்லி, ஹைதராபாத், சிஎஸ்கே,மும்பை போன்ற வலுவான அணிகளை பெங்களூர் எதிர்கொள்ளும். எளிதான அணியிடம் தோல்வி அடைந்த பெங்களூர் இனி வரும் போட்டிகளில் வெற்றிபெறுமா என்று சந்தேகம் வந்துள்ளது.


Click it and Unblock the Notifications