
ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸால் தள்ளி வைக்கப்பட்டு, பின் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. அதிலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஐபிஎல் அணிகள் கிளம்பின
அனைத்து ஐபிஎல் அணிகளும் இந்தியாவில் இருந்து தனித்தனியாக தங்கள் வீரர்களை அழைத்துக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் கிளம்பின. வெளிநாட்டில் உள்ள வீரர்கள் தாங்களாகவே ஐக்கிய அரபு அமீரகம் வந்தனர். அவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் மலிங்கா இல்லை.

மலிங்கா எங்கே?
இதை அடுத்து லசித் மலிங்கா எங்கே? என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து வெளியான தகவலின் படி, மலிங்கா 2020 ஐபிஎல் தொடரின் முதல் பகுதியில் பங்கேற்க மாட்டார். லீக் சுற்றின் இறுதியில் அவர் அணியுடன் இணைய வாய்ப்பு உள்ளது.

அறுவை சிகிச்சை
லசித் மலிங்காவின் தந்தைக்கு இன்னும் சில தினங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. அவரது உடல்நிலையும் சரியாக இல்லை. அதனால் லசித் மலிங்கா இலங்கையிலேயே தங்கி இருக்கப் போவதாக கூறப்படுகிறது. கொழும்புவிலேயே அவர் பயிற்சி செய்ய இருக்கிறார்.

இலங்கை கட்டுப்பாடு
அவர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இப்போது இருந்து விட்டு, அவரது தந்தையின் அறுவை சிகிச்சை சமயத்தில் மட்டும் கூட இலங்கை செல்லலாம். ஆனால், இலங்கையின் வெளிநாட்டுக்கு சென்று வந்தவர்களுக்கு இருக்கும் விதிமுறைகள் காரணமாக அவர் தாமதமாக செல்ல உள்ளார்.

மீண்டும் இணைவதில் சிக்கல்
இலங்கையில் வெளிநாட்டுக்கு சென்று வந்தவர்கள் நிச்சயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால் மலிங்கா ஐபிஎல் தொடரின் இடையே இலங்கை வந்தால் அவரால் மீண்டும் அணியுடன் இணைய முடியாமல் கூட போகலாம்.

பெரும் இழப்பு
அதன் காரணமாகவே மலிங்கா முதல் பாதி ஐபிஎல் தொடரை தவிர்க்க முடிவு செய்துள்ளார். அவர் இல்லாதது நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் இழப்பு தான். கடந்த சீசனிலும் தாமதமாக அணியுடன் சேர்ந்த மலிங்கா இறுதிப் போட்டி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இறுதிப் போட்டி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 2019 ஐபிஎல் தொடரில் நடந்த இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் முதல் ஐந்து பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர், கடைசி பந்தில் ஷர்துல் தாக்குர் விக்கெட்டையும் கைப்பற்ற, மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றது.

மும்பை வேகப் பந்துவீச்சாளர்கள்
மலிங்கா இல்லாவிட்டாலும் மும்பை அணி தன்னிடம் உள்ள வேகப் பந்துவீச்சாளர்களை வைத்தே எளிதாக சமாளிக்கும். பும்ரா, நாதன் கோல்டர் நைல், ட்ரென்ட் பவுல்ட், மிட்செல் மெக்ளினகன், தவால் குல்கர்னி, ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்டு ஆகியோர் அந்த அணியின் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











