2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடருக்கான திட்டமிடலில் பிசிசிஐ இறங்கி உள்ளது. பிசிசிஐ அமைப்பை சமீபத்தில் தான் சுதந்திரமாக இயங்க துவங்கி உள்ளது. முன்னதாக, உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் தான் பிசிசிஐ-ஐ நிர்வகித்து வந்தனர்.
ஐபிஎல் கூட்டம்
இந்த நிலையில், ஐபிஎல் தொடர் சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பின் தேர்வு செய்யப்பட்ட பிசிசிஐ அதிகாரிகளால் நடைபெற உள்ளது. புதிய உறுப்பினர்கள் பங்கேற்கும் முதல் கூட்டம் வரும் செவ்வாய் அன்று நடைபெற உள்ளது.
என்ன திட்டம்?
இந்த முதல் கூட்டத்தில் ஒரு அதிரடி திட்டத்தை பற்றி விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அந்த திட்டத்தின் படி இனி ஒரு அணியில் 11 வீரர்கள் மட்டுமே ஆட முடியும் என்ற அடிப்படை கிரிக்கெட் விதி உடைக்கப்பட உள்ளது.
15 வீரர்கள்
இந்த புதிய திட்டத்தின் படி ஒரு அணி 11 வீரர்களை அறிவிக்காமல், 15 வீரர்கள் கொண்ட அணியை போட்டிக்கு முன்பாக அறிவிக்கும். போட்டியின் இடையே தேவைப்படும் இடங்களில் மாற்று வீரரை கேப்டன் களமிறக்கிக் கொள்ளலாம்.
ஓவர் முடிவுக்கு பின்
இந்த மாற்று வீரர், ஓவருக்கு இடையே அல்லது விக்கெட் வீழ்ச்சிக்குப் பின் களமிறங்கலாம். உதாரணமாக, கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், ஆண்ட்ரே ரஸ்ஸல் போன்ற அதிரடி வீரரை, மாற்று வீரராக களமிறக்கலாம்.
பவர் பிளேயர்
அதே போல, கடைசி ஓவரில் 6 ரன்களை தடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், மாற்று வீரராக பும்ரா போன்ற சிறந்த பந்துவீச்சாளரை களமிறக்கலாம். இந்த மாற்று வீரர்கள் "பவர் பிளேயர்" என அழைக்கப்படுவார்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
ரசிகர்களை ஈர்க்கும்
இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால், அணிகளின் திட்டமிடல் முற்றிலுமாக மாறும். மேலும், ரசிகர்களை இந்த புதிய நடைமுறை பெரிய அளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கிறது பிசிசிஐ.
ஒப்புதல் உள்ளது
இந்த திட்டத்துக்கு ஏற்கனவே பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், 2020 ஐபிஎல் தொடரில் இந்த புதிய திட்டத்தை எளிதாக அமல்படுத்தலாம் என தெரிகிறது.
உள்ளூர் தொடரில்..
எனினும், ஐபிஎல் தொடரில் செயல்படுத்தி பார்க்கும் முன் உள்ளூர் டி20 தொடரான சையது முஷ்டாக் அலி தொடரில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது பற்றி ஐபிஎல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.
அணிகள் முடிவு
இந்த புதிய திட்டம் குறித்து பிசிசிஐ முடிவு எடுத்தாலும், ஐபிஎல் அணிகள் ஒப்புக் கொள்ளுமா என்பது பற்றி தெரியவில்லை. சில அணிகள் எதிர்ப்பு தெரிவித்தால், இந்த திட்டம் அடுத்த ஐபிஎல் தொடரில் அமல்படுத்தப்படுவதில் சிக்கல் ஏற்படும்.