பும்ரா திணறல்
பும்ரா கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக நீண்ட காலமாக கிரிக்கெட் பயிற்சி இல்லாமல் மற்ற வீரர்களைப் போல அவதிப்பட்டார். அந்த நிலையில் தான் ஐபிஎல் போட்டிகளில் ஆட வந்தார். மற்ற பந்துவீச்சாளர்களைப் போல அவரால் எளிதாக தன் இயல்பான துல்லிய பந்துவீச்சை வெளிப்படுத்த முடியவில்லை.
என்ன காரணம்?
பும்ரா இந்திய அணிக்கு ஆடும் போது துவக்க பந்துவீச்சாளராக பவர்பிளே ஓவர்களில் பயன்படுத்தப்படுவார். அந்த ஓவர்களில் பும்ரா கட்டுக் கோப்பாக பந்து வீசுவார். அது ஐபிஎல் தொடரில் நடக்கவில்லை. ட்ரென்ட் போல்ட் - பாட்டின்சன் முதல் நான்கு போட்டிகளில் துவக்க வீரராக செயல்பட்டு வந்தனர்.
மாற்றம்
இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா பவர்பிளே ஓவர்களில் ட்ரென்ட் போல்ட் உடன் சேர்ந்து பந்து வீசினார். இருவரும் சேர்ந்து முதல் மூன்று ஓவர்களில் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். பும்ரா தன் முதல் இரண்டு ஓவர்களில் வெறும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
4 விக்கெட்கள்
இந்தப் போட்டியில் பும்ரா 4 விக்கெட்கள் வீழ்த்தினார். 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 14 டாட் பால்கள் வீசி இருந்தார். இது தான் பும்ராவின் இயல்பான பந்துவீச்சு. மேலும், தன் ஆயுதமான யார்க்கர் பந்துகளை அதிக அளவில் வீசி ராஜஸ்தான் வீரர்களை அச்சுறுத்தினார்.
பார்ம் அவுட் இல்லை
இதன் மூலம் நீண்ட இடைவெளியால் ஏற்பட்ட சிறிய தடுமாற்றம் மட்டுமே தனக்கு ஏற்பட்டது, தான் பார்ம் அவுட் ஆகவில்லை என நிரூபித்துள்ளார் பும்ரா. இது மற்ற அணிகளுக்கு பெரிய தலைவலியாக மாறி உள்ளது. மும்பை அணி முன்பை விட வலுவான அணியாக மாறி உள்ளது.
மும்பை அணியின் நிலை
மும்பை அணி கடந்த நான்கு போட்டிகளில் அணியை மாற்றவில்லை. தன் சிறந்த அணியை அடையாளம் கண்டு, தொடர்ந்து அதே அணியுடன் ஆடி வருகிறது. ஆறு போட்டிகளில் ஆடி 8 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது மும்பை அணி.
சிக்கலில் மற்ற அணிகள்
ஏற்கனவே, ட்ரென்ட் போல்ட், பாட்டின்சன், ராகுல் சாஹர் என நல்ல பார்மில் இருக்கும் வீரர்களுடன் ஆபத்தான பும்ராவும் மும்பை அணிக்கு கூடுதல் வலு சேர்க்க உள்ளார். மற்ற அணிகள் மும்பை அணியை வீழ்த்துவது இனி கடினமானதாக மாறி உள்ளது.