2020 ஐபிஎல்
2௦20 ஐபிஎல் தொடரில் பங்கேற்ற எட்டு அணிகளில் லீக் சுற்றிலும், பிளே-ஆஃப்பிலும், பின் இறுதிப் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்ட ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே. மற்ற ஏழு அணிகளும் லீக் சுற்றிலேயே தட்டுத் தடுமாறின.
சிறப்பான வெற்றி
2020 ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பை கைப்பற்றியது. டெல்லி அணியை இந்த சீசனில் மட்டும் நான்கு முறை வீழ்த்தியது மும்பை. அந்த அளவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வலுவாக இருந்தது.
இரண்டு ஆண்டுகள் தொடர் வெற்றி
தொடர்ந்து 2019 ஐபிஎல் மற்றும் 2020 ஐபிஎல் கோப்பைகளை வென்று சிஎஸ்கே அணியின் 2010, 2011 ஐபிஎல் வெற்றி சாதனையை சமன் செய்துள்ளது அந்த அணி. 2021 ஐபிஎல் தொடரை வெல்லும் வாய்ப்பும் மும்பை அணிக்கு இருப்பதாக இறுதிப் போட்டி வெற்றிக்கு பின் கூறப்பட்டது.
2021 ஐபிஎல்
மும்பை இந்தியன்ஸ் அணியில் நல்ல இளம் வீரர்கள் சரியான சமநிலையில் இருப்பதால் அந்த அணி அடுத்த ஆண்டும் இதே செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும் என விமர்சகர்கள் கூறினர். ஆனால், அதற்குத் தான் சிக்கல் எழுந்துள்ளது. அடுத்த சீசனில் மும்பை அணி அந்த இளம் வீரர்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிசிசிஐ திட்டம்
2020 ஐபிஎல் தொடர் பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து பிசிசிஐ, 2021 ஐபிஎல் தொடரை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருகிறது. ஒன்பதாவதாக ஒரு அணியை சேர்க்க உள்ளது. அப்படி புதிய அணியை சேர்த்தால், ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்தியே ஆக வேண்டும்.
வீரர்களை இழக்க நேரிடும்
இந்த நிலையில், மெகா ஏலத்துக்கு முன் ஐபிஎல் அணிகள் சில வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். மற்ற வீரர்களை ஏலத்தில் விட வேண்டும். அப்படி நடந்தால் மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் வீரர்களை ஏலத்தில் மற்ற அணிகளிடம் இழக்க நேரிடும்.
மும்பை இந்தியன்ஸ் என்ன செய்யும்?
இதை சமாளிக்க மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணியின் மிக முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு ஆகியோரை தக்க வைத்தும், ஏலம் முடிந்த பின் வீரர்களை ரீட்டெயின் செய்தோ வாங்கி விடும்.
சிஎஸ்கே 2018 திட்டம்
மற்ற வீரர்களை அப்படியே வளைக்க சிஎஸ்கே அணியின் 2018 மெகா ஏல திட்டத்தை பின்பற்றும். அப்போது சிஎஸ்கே அணி இரண்டு ஆண்டு தடைக்கு பின் மீண்டும் வந்து தங்களின் பழைய வீரர்களை எத்தனை கோடி ஆனாலும் வாங்கியது. அதே திட்டத்தை மும்பை அணியும் செயல்படுத்தக் கூடும்.
கடும் போட்டி
2021 ஐபிஎல் தொடரில் ஒன்பதாவது அணி அறிமுகப்படுத்தப்பட்டால், கூடுதல் அணியின் காரணமாக இயல்பாகவே ஏலத்தில் ஒவ்வொரு சிறந்த வீரருக்கும் கடும் போட்டி இருக்கும். இது தவிர மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் நல்ல பார்மில் இருப்பதால் அவர்களை இழுக்க மற்ற அணிகள் கடுமையாக மோதும்.
வெற்றி பெறலாம்
இதை எல்லாம் தாண்டி சிஎஸ்கே அணியைப் போல நல்ல வீரர்களை ஏலத்துக்கு பின்னும் அப்படியே தக்க வைத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி பலமான அணியாகவே தொடர முடியும். 2021 ஐபிஎல் தொடரை வெல்லும் வாய்ப்பும் அதிகரிக்கும்.