மும்பை இந்தியன்ஸ் -சிஎஸ்கே மோதல்
ஐபிஎல் போட்டிகள் வரும் 19ம் தேதி துவங்கவுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே அணியுடன் முதல் நாளிலேயே மோதவுள்ளது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அணி வீரர்களின் பிட்னஸ் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும் அணி நிர்வாகம் அவர்களின் உற்சாகத்திற்கு வழிவகை செய்து வருகிறது.
வீரர்களை குஷிபடுத்த முனைப்பு
பல்வேறு பொழுதுபோக்குகளை அவர்களுக்காக வடிவமைத்து கொடுத்து வருகிறது அணி நிர்வாகம். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அணி வீரர்களை குஷிப்படுத்த முனைப்பு காட்டுகிறது. இந்நிலையில் பயிற்சி ஆட்டங்களை முடித்துக் கொண்டு அந்த அணி வீரர்கள் பாதுகாப்புடன் தங்களது குடும்பத்தினருடன் கடற்கரையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடும்பத்தினருடன் கொண்டாட்டம்
குறிப்பாக அணியின் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய மனைவி ரித்திகா மற்றும் மகள் சமைராவுடன் பின்புலத்தில் சூரிய அஸ்தமனத்துடன் கடற்கரையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதன் புகைப்படங்களை மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சில வீரர்கள் அலைகளில் நீச்சலடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடும்பத்தினருடன் புகைப்படம்
இதுகுறித்த ஒரு அழகான புகைப்படத்தை ரோகித் சர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் அவர் இருக்கும்படியாக அந்த புகைப்படம் உள்ளது. தன்னுடைய அணியை சிறப்பாக வழிநடத்தி இதுவரை 4 ஐபிஎல் கோப்பைகளை பரிசளித்துள்ள ரோகித் சர்மா, இந்த ஆண்டு சீசனையும் சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வெல்வார் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.