விமானம் இல்லை.. திரும்பி செல்ல முடியாது.. மும்பையில் சிக்கிய ஆஸி. வீரர்கள்.. பரிதாபமான நிலை!
மும்பை: ஐபிஎல் தொடரை புறக்கணித்துவிட்டு பாதியில் வெளியேறிய ஆஸி. வீரர்கள் விமானம் கிடைக்காமல் மும்பையில் சிக்கி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் தீவிரமாக பரவி வருகிறது. தினமும் 3.60 லட்சத்திற்கும் அதிகமான கேஸ்கள் இந்தியாவில் அதிகாரபூர்வமாக பதிவாகி வருகிறது.
இந்தியாவில் ஒரு பக்கம் கொரோனா கேஸ்கள் அதிகரித்தாலும் இன்னொரு பக்கம் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ரசிகர்கள் இல்லாமல் ஒரு சில மைதானங்களில் மட்டும் மாறி மாறி போட்டிகள் நடந்து வருகின்றன.

ஐபிஎல்
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில், அச்சம் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் வரிசையாக தொடரில் இருந்து வெளியேறி வருகிறார்கள். ராஜஸ்தான் அணியில் இருந்து ஆண்ட்ரு டை வெளியேறிவிட்டார். அதேபோல் பெங்களூர் அணியில் இருந்து ஆசம் சாம்பா, கேன் ரிச்சர்சன் வெளியேறிவிட்டனர்.

எப்படி
ஆஸ்திரேலிய வீரர்கள்தான் தற்போது வெளியேறி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்லும் விமானங்களை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது. இந்தியாவில் இருந்து மே 15ம் தேதி வரை நேரடியாக விமானங்கள் எதையும் அனுமதிக்க முடியாது என்று ஆஸ்திரேலிய அரசு தடை செய்துள்ளது.

தடை
இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய ஆஸ்திரேலிய வீரர்கள் மும்பையில் சிக்கி உள்ளனர். ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்ஸன் உள்ளிட்ட வீரர்கள் தற்போது மும்பையில் விமானம் கிடைக்காமல் சிக்கி உள்ளனர். நேற்றே இவர்கள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டாலும் இன்னும் இவர்களுக்கு விமானம் கிடைக்கவில்லை.

விமானம்
இதனால் இவர்கள் நேரடியாக ஆஸ்திரேலியா செல்லாமல் அருகில் இருக்கும் நாடுகளுக்கு சென்றுவிட்டு, பின் அங்கிருந்து இன்னொரு விமானம் மூலம் ஆஸ்திரேலியா செல்லும் திட்டத்தில் உள்ளனர். விமான தடை காரணமாக மற்ற ஆஸி. வீரர்கள் ஐபிஎல்லில் தொடர்வார்கள் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications