
இன்றைய ஆட்டம்
இன்று நடைபெறும் 50வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் தற்போது வரை 12 போட்டிகளில் விளையாடி அதில் 9ல் வெற்றி பெற்றுள்ளன. எனவே 18 புள்ளிகளைப் பெற்று இரு அணிகளுமே ப்ளே ஆப்பை உறுதி செய்துள்ளனர். இன்றைய தினம் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துவிடும். எனவே இப்போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பழிதீர்க்குமா சென்னை
இந்த தொடரில் இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்திருந்தது சென்னை. எனவே இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. சிஎஸ்கே அணி கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டு 189 ரன்கள் விளாசியது. இந்த ஸ்கோரை ராஜஸ்தான் எட்டாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அசால்டாக வெற்றி பெற்றது.

சிஎஸ்கேவின் சிக்கல்
பேட்டிங்கை பொறுத்தவரை ருத்ராஜ் கெயிக்வாட், டூப்ளசிஸ் முதல் அம்பத்தி ராயுடு, ஜடேஜா வரை ஆழமான வரிசை உள்ளது. ஆனால் பந்துவீச்சில் தான் பின்னடைவு உள்ளது. கடந்த போட்டியில் டுவைன் பிராவோ, தீபக் சஹார் இருவரும் இடம்பெறவில்லை. தீபக் பவர் பிளேவிலும், பிராவோ டெத் ஓவர்களிலும் சிறப்பாக பந்துவீசக்கூடியவர்கள். இவர்கள் இல்லாததே சிஎஸ்கே அணி தோல்விக்கு காரணமாக அமைந்தது. எனவே இந்த போட்டியில் அவர்கள் இருவரையும் கொண்டு வந்தால் மட்டுமே டெல்லி அணியை சுருட்ட முடியும்.

டெல்லியின் ஃபார்ம்
டெல்லி அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய நம்பிக்கையுடன் களமிறங்கவுள்ளது. டாப் ஆர்டரில் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் சொதப்பினாலும், பின் வரிசையில் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நம்பிக்கை தருகின்றனர். பந்துவீச்சிலும், ரபாடா, அஸ்வின் என அனைவரும் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். இது சிஎஸ்கேவுக்கு நிச்சயம் தலைவலியை கொடுக்கும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications