அமீரகம்: முதல் குவாலிஃபையர் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு பவுலிங் மிகப்பெரும் சிக்கல் உள்ளது.
ஐபிஎல் தொடரின் முதல் ப்ளே ஆஃப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற முணைப்பு காட்டி வருகிறது.

இந்த போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இதற்கு காரணம் இரு அணிகளின் பேட்டிங் மற்றும் பவுலிங் பலத்தை வைத்து பார்க்கும் போது டெல்லி அணி ஒருபடி மேல் உள்ளது. சென்னை அணியில் மிடில் ஆர்டர் நிலைமை தற்போது மோசமாக உள்ளது. மிடில் ஆர்டர் சொதப்பல் காரணமாக தான் கடந்த 3 போட்டிகளிலுமே சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது. ஆனால் டெல்லி அணியின் ஓப்பனிங் முதல் மிடில் ஆர்டர் வரை என அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சு, டெல்லி அணியை விட பலவீனமாக தான் இருக்கிறது. சென்னை அணியில் தற்போது தீபக் சஹார், ஜடேஜா, ஹாசல்வுட், பிராவோ என அனைவரின் பந்துவீச்சையும் டெல்லி அணி பேட்ஸ்மேன்கள் சுலபமாக எதிர்கொண்டு வருகின்றனர். ஷர்துல் தாக்கூர் மட்டுமே முக்கியமான கட்டத்தில் விக்கெட் எடுத்துக்கொடுக்கிறார். ஆனால் அவரும் மிடில் ஓவர்களில் தான் கொண்டுவரப்படுவதால், பார்ட்னர்ஷிப் நன்றாக வளர்ந்துவிடும்.
டெல்லி அணியை பொறுத்தவரை பந்துவீச்சு மிக வலுவானதாக உள்ளது. ரபாடா மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் டெத் ஓவர்களில் பெரும் அச்சுறுத்தலை கொடுக்கின்றனர். இதே போல மிடில் ஓவர்களில் அக்ஷர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆன்ரிச் நார்ட்ஜே, டாம் கரண் பெரும் தலைவலி கொடுப்பார்கள். இவர்கள் அனைவருமே தற்போது நல்ல ஃபார்மில் உள்ளனர். இதனால் சிஎஸ்கே பேட்டிங் ஆர்டர் தாக்குப்பிடிக்குமா என்பதில் சந்தேகமே.