பிரச்னை
இரு அணிகளும் மோதும் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு தொடங்குகிறது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி கம்பேக் கொடுத்துள்ளது. இதுவரை சந்தித்துள்ள 3 போட்டிகளில் 2 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. எனினும் இந்த 3 போட்டிகளில் அந்த அணி பேட்டிங், பவுலிங் என சிறப்பாக செயல்பட்ட போதும், தொடக்கத்தில் சரிவையே சந்திக்கிறது. இதனால் பின்னர் வரும் வீரர்களுக்கு பிரஷர் அதிகரிக்கிறது.
மீண்டும் சொதப்பல்
இதற்கு முக்கிய காரணம் தொடக்க வீரர் ருத்ராஜ் கெயிக்வாட் சொதப்புவதே. இதுவரை நடந்துள்ள 3 போட்டிகளிலும் ருத்ராஜ் கெயிக்வாட் பின்வருமாறு 5, 5, 10 என்ற ரன்களே அடித்துள்ளார். இவரின் சொதப்பலால் சிஎஸ்கே ஆரம்பத்திலேயே தடுமாறுகிறது. இதனால் இன்றைய போட்டியில் சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக கெயிக்வாட்டிற்கு பதிலாக ராபின் உத்தப்பாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணி கணிப்பு
உத்தப்பா, டூப்ளசிஸ், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ஜடேஜா, தோனி, பிராவோ, சாம் கரண், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார்
அதிரடி முடிவு
இதனிடையே இதுகுறித்து பேசியுள்ள அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெம்மிங், ராபின் உத்தப்பா விளையாட காத்திருக்கிறார்தான். ஆனால் ருத்ராஜ் கெயிக்வாட்டிற்கு, அவர் கடந்தாண்டு சிறப்பாக ஆடியதற்காக இந்த சீசனில் சிறிது அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீரரும், அவர் முயற்சிப்பதை செய்ய நாங்கள் தேவையான அளவில் வாய்ப்புகளை கொடுப்போம். அதுவே சிஎஸ்கே அணி எப்போதும் பின்பற்றுவதாகும்.
ராபின் உத்தப்பா
ஐபிஎல் தொடரில் மிகவும் அனுபவம் வாய்ந்த தொடக்க வீரரான உத்தப்பா, இதுவரை 182 இன்னிங்ஸ்களில் விளையாடி, 4607 ரன்களை எடுத்துள்ளார். இதனால் இவர் இன்றைய போட்டியில் சேர்க்கப்பட்டால் சென்னை அணிக்கு இருக்கும் ஒரே ஒரு பேட்டிங் பிரச்னையும் தீர்ந்துவிடும். மும்பை பிட்ச் பேட்டிங்கிற்கு உதவக்கூடியது என்பதால் தொடக்கத்தில் இருந்தே சிஎஸ்கே அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.