
எப்படி?
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆல்ரவுண்ட அக்ஷர் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அணி நிர்வாகம், அக்ஷர் முதலில் மும்பையில் ஹோட்டலுக்கு வந்த போது நெகட்டீவ் என்று தான் பரிசோதனை முடிவு வந்தது. ஆனால் 2வது முறையாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்புடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் தெரிவித்துள்ளது. மேலும் அவர் தனி அறையில் இருந்ததால் மற்ற வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.

அக்ஷர் 2வது வீரர்
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கொரோனாவால் பாதிக்கப்படும் 2வது வீரர் அக்ஷர் பட்டேல் ஆவார். இதற்கு முன்னர் கடந்த மார்ச் 22ம் தேதி கொல்கத்தா அணியை சேர்ந்த நிதிஷ் ராணாவுக்கு கொரோனா உறுதியானது. பின்னர் 12 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு அவர் கொரோனாவில் இருந்து மீண்டார். இதே போல சென்னை அணியை சேர்ந்த ஊழியருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது.

பிசிசிஐ விதிமுறை
பிசிசிஐயின் விதிமுறைப்படி இந்தாண்டு கொரோனா அறிகுறி இருப்பவர்கள், தொற்று உறுதியானவர்கள் 10 நாட்கள் பயோ பபுள் எனப்படும் அணியின் பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே சென்று தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பத்து நாட்களில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதுடன் அவர்கள் எந்தவித உடற்பயிற்சியிலும் ஈடுபட கூடாது. இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு அறிகுறி அதிகமாகும் பட்சத்தில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவார்கள்.

ஃபார்மில் இருக்கும் வீரர்
அக்ஷர் பட்டேல் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அனைவரையும் அசரடித்தார். 3 டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்களை எடுத்து சாதனை புரிந்தார். டெல்லி கேபிட்டல்ஸ் அணி வரும் 10ம் தேதி சென்னை அணியை எதிர்கொள்கிறது. ஆனால் ஃபார்மில் இருக்கும் வீரரை இழந்துள்ளதால் இது டெல்லி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











