
சென்னை அணி வெற்றி
இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணி பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் மற்றும் ஹெட்மயர் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 172 ரன்களை குவித்தது. பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சர்ஃப்ரைஸ் மாற்றங்கள்
இந்த ஆட்டம் நடைபெற்று கொண்டிந்த போது சென்னை அணியின் பேட்டிங்கில் அதிரடி மாற்றங்கள் நடந்தன. ஓப்பனிங் வீரர் டூப்ளசிஸ் முதல் ஓவரிலேயே வெளியேற, கெய்க்வாட் மற்றும் உத்தப்பா ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன்களை உயர்த்தினர். அவர்கள் 2வது விக்கெட்டிற்கு 110 ரன்கள் குவித்தனர். அணியின் ஸ்கோர் 113 ஆக இருந்தபோது உத்தப்பா 63 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் 4-வது வீரராக மொயின் அலி அல்லது அம்பத்தி ராயுடு ஆகிய இவரில் ஒருவர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் 4-வது வீரராக களமிறங்கினார்.

ஷர்துல் தாக்கூரின் ஆட்டம்
முன்னணி பேட்ஸ்மேன்கள் இருக்கையில், ஷர்துல் களமிறங்கிய அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்தது. பெரிய அதிரடி காட்டப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் இறுதியில் தோனி 6 பந்துகளில் 3 பவுண்டரிகளை விளாச சென்னை அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ரகசியம் உடைத்த தோனி
இந்நிலையில் ஷர்துல் தாக்கூர் முன்கூட்டியே களமிறங்கியது குறித்து தோனி விளக்கம் அளித்தார். அதில் அவர், எங்கள் அணியில் ஜடேஜாவை தவிர வேறு யாரையும் நாங்கள் இதுவரை முன்கூட்டியே களமிறக்கி முயற்சி செய்து பார்க்கவில்லை. சிஎஸ்கேவில் 9வது வீரர் வரை பேட்டிங் செய்வார்கள். தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரால் கூட தங்கள் பங்களிப்பை பேட்டிங்கில் வழங்க முடியும்.

அவசர தேவை
இன்றைய போட்டியில் உத்தப்பா ஆட்டமிழந்து வெளியேறியதும் அதிரடி காட்டுபவர் தேவைப்பட்டது. ஒரு பேட்ஸ்மேனை நான் களமிறக்கியிருந்தால் அவர் முதல் பந்து முதலே பவுண்டரி அடிக்கலாமா என்று சற்று தயக்கம் காட்டியிருப்பார்.
ஆனால் ஷர்துல் தாகூர் அல்லது தீபக் சாகர் ஆகியோர் உள்ளே சென்றால் அவர்கள் முதல் பந்தில் இருந்தே பவுண்டரி அடிக்க செல்வார்கள். இதுபோன்ற பிட்ச்-ல் ஹிட்டர்களிடமிருந்து ஓரிரு பவுண்டரிகள் வந்தால் கூட அது சேஸிங்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே நாங்கள் ஷர்துல் தாகூரை முன்கூட்டியே அனுப்பினோம் என தோனி விளக்கமளித்தார்.


Click it and Unblock the Notifications











