முக்கிய போட்டி
இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி ரன் மழை பொழிந்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை குவித்தது. சீனியர் வீரர்கள் சொதப்ப, மறுமுனையில் நின்றிருந்த இஷான் கிஷான் 32 பந்துகளில் 84 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 82 ரன்களையும் விளாசினார். இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியால் 193 ரன்களையே அடிக்க முடிந்தது. அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 69 ரன்களும், ஜேசன் ராய் 34 ரன்களும் எடுத்தனர்.
மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு
இது ஒருபுறம் இருக்க, இந்த போட்டியில் மும்பை அணி மேட்ச் ஃபிக்ஸிங் செய்ததாக குற்றச்சாட்டுக்கள் பரவி வருகின்றன. அமீரகத்தில் இந்தாண்டு நடைபெற்ற எந்த லீக் போட்டியிலும் அதிக ஸ்கோர் குவியவில்லை. ஆனால் நேற்று மும்பை அணிக்கு 200+ ரன்கள் தேவை என்ற நிலை இருந்த போது பிட்ச் அதற்கேற்றார் போல பேட்டிங்கிற்கு சாதகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதே போல ஐதராபாத் அணியின் கேப்டன் மாற்றப்பட்டது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முக்கிய வீரர்கள் இல்லை
ஐதராபாத் அணியின் கேப்டனாக நேற்று மணிஷ் பாண்டே செயல்பட்டார். வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டதாக காரணம் கூறப்பட்டது. இதே போல அந்த அணியின் முக்கிய பவுலரான புவனேஷ்வர் குமாரும் அணியில் இடம்பெறவில்லை. இதனால் அந்த அணி பவுலிங் மற்றும் ஃபீல்டிங் இரண்டிலும் மிக மோசமாக செயல்பட்டது. இவை எல்லாம் மும்பை அணிக்கு சாதகமாக ஏற்பாடு செய்யப்பட்டவையோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பினர்.
பொல்லார்ட் எல்பிடபள்யூ
இதனையெல்லாம் விட மிக பெரிய சர்ச்சையை கிளப்பியது பொல்லார்டின் விக்கெட் தான். சித்தார்த் கவுல் வீசிய 11வது ஓவரில் கெயீரன் பொல்லார்ட் எல்பிடபள்யூ ஆனார். இதற்கு களத்தில் இருந்த நடுவரும் அவுட் கொடுத்தார். எனினும் பொல்லார்ட் 3வது நடுவரிடம் ரிவ்யூவ் கேட்டார். அதில் பந்து பேடில் பட்டது தெரிந்தது. இதனையடுத்து பொல்லார்ட்டும் வெளியேறத் தொடங்கினார்.
நாட் அவுட்
ஆனால் பால் டிராக்கிங்கில் பந்து ஸ்டம்பிற்கு மேலே சென்றது. இதனால் முடிவு மாற்றப்பட்டு நாட் அவுட் கொடுக்கப்பட்டது. பொல்லார்டின் முட்டியில் பட்ட பந்து நேராக மிடில் அல்லது லெக்சைட் ஸ்டம்பில் படும் அளவிற்கு தான் இருந்தது. ஆனால் எப்படி திடீரென ஸ்டம்பிற்கு மேலே சென்றது என ரசிகர்கள் வினவினர். அதற்கு ஏற்றார் போலவே 3வது நடுவரும் பால் டிராக்கிங்கை காட்ட நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது சர்ச்சையானது. எனவே மும்பை மேட்ச் ஃபிக்ஸிங் செய்தது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
உண்மை
இந்நிலையில் அதன் உண்மை தெரியவந்துள்ளது. கெயீரன் பொல்லார்ட் 6.4 அடி உயரம் கொண்டவர் ஆவார். இவர் ஸ்டம்பிற்கு அருகில் நிற்காமல் சற்று முன் தள்ளி தான் நின்றுக்கொண்டிருந்தார். இதனால் ஸ்டம்பின் உயரம் பொல்லார்டின் மூட்டுப்பகுதியை விட உயரம் சிறியதாக இருந்திருக்கும். எனவே பந்து மூட்டுப்பகுதியில் நேராக பட்டிருந்த போதிலும், அது ஸ்டம்பை விட மேலே தான் சென்றிருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் ஒருவேளை மும்பை அணி மேட்ச் ஃபிக்ஸிங் செய்திருந்தால் 65 ரன்களுக்குள் ஐதராபாத்தை சுருட்டியிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.