
ஆர்சிபி அணி தோல்வி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் விளையாடிய கொல்கத்தா அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது. இதனால் ஆர்சிபி வெற்றி பெறுவதற்கு வலுவான நிலையில் இருந்தது. எனினும் டேன் கிறிஸ்டியன் வீசிய மூன்றே பந்தில் ஒட்டுமொத்த ஆட்டமும் கேகேஆர் பக்கம் சென்றது.

அந்த 3 பந்துகள்
ஆட்டத்தின் 11வது ஓவர் வரை கேகேஆர் அணி 3 விக்கெட்களை இழந்திருந்தது. வெற்றி பெற 54 பந்துகளில் 60 ரன்கள் தேவைப்பட்டது. ரன் குவிக்கவும் அந்த அணி திணறி வந்தது. அப்போது டேன் கிறிஸ்டியன் வீசிய 12வது ஓவரில் சுனில் நரேன் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இது அந்த அணி வெற்றி பெறுவதற்கு திருப்புமுணையாக இருந்தது.

ரசிகர்களின் எல்லை மீறல்
இந்நிலையில் ஆர்சிபியின் தோல்விக்கு காரணம் டேன் கிறிஸ்டியன் தான் எனக்கூறி ரசிகர்கள் மிக மோசமாக அவரை விமர்சித்து வருகின்றனர். இதில் எல்லை மீறிய சில ரசிகர்கள், டேன் கிறிஸ்டியன் மனைவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக மோசமாகவும், வன்மமான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். அவரின் உடல்நிலையையும் கருத்தில் கொள்ளாமல் சில ரசிகர்கள் சீண்டியுள்ளனர். இதனால் கிறிஸ்டியனின் மனைவி மிக வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது.

மனம் கலங்கிய கிறிஸ்டியன்
இந்த சம்பவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள டேன் கிறிஸ்டியன், எனது மனைவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாருங்கள். கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் நான் சொதப்பிவிட்டேன் தான். ஆனால் விளையாட்டில் அது சகஜம். இதற்காக எனது மனைவியை மோசமாக பேசாதீர்கள். அவரை விட்டுவிடுங்கள் என மனம் வருந்தி கேட்டுள்ளார். இதனால் கிறிஸ்டியனுக்கு ஆதரவாக கோலியின் ரசிகர்கள் எழுந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications