இளைஞர்களின் "ஹீரோ".. அப்துல் கலாம் பிறந்தநாளன்று.. "நச்"சுன்னு அமைந்த ஐபிஎல் ஃபைனல்
மும்பை: மீதமுள்ள 31 ஐபிஎல் போட்டிகளையும் நடத்தும் தேதிகள் வெளியாகியிருக்கும் நிலையில், இறுதிப் போட்டி நச்சென்று ஒரு நாளில் அமைந்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் வருண் சக்கரவர்த்திக்கு கொரோனா தொற்று முதலில் ஏற்பட்டு, பிறகு அடுத்தடுத்து பல வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என கொரோனா பரவியது.
இதனால், மறு தேதி குறிப்பிடாமல் ஐபிஎல்லை பிசிசிஐ ஒத்திவைத்தது. மீண்டும் தொடரை இந்தியாவில் நடத்த வாய்ப்பே இல்லாத சூழலில், பிசிசிஐ சார்பில் நடந்த "SGM" மீட்டிங்கில் ஐபிஎல் தொடரை அமீரகத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

21 நாளில்
செப்டம்பர் - அக்டோபர் வரை மீதமுள்ள 31 போட்டிகளையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படும் என்றும், 7 போட்டிகள் single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று ஸ்போர்ட்ஸ் டுடே சமீபத்தில் செய்தி வெளியிட்டது. ஆனால், பிசிசிஐ அதுகுறித்த தகவலை உறுதி செய்யவில்லை.

அப்துல் கலாம்
இந்நிலையில், இதுவரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் தேதிகள் வெளியிடப்படாமல் இருந்து வந்தன. இந்த நிலையில், செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி, அக்டோபர் 15ம் தேதி ஐபிஎல் போட்டிகள் நிறைவடையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, அக்டாபர் 15ம் தேதி ஐபிஎல்லின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. அன்றைய தினம், தமிழகம் பெற்றெடுத்த விஞ்ஞானியும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், என்றும் தமிழக இளைஞர்களின் கனவு நாயகனாக விளங்கும் அப்துல் கலாமின் பிறந்தநாள் அன்று நடைபெறுகிறது.

மகேந்திர சிங் தோனி
இதில் என்ன அப்படி ஸ்பெஷல் இருக்குன்னு கேட்குறீங்களா? மற்ற மாநிலத்தவர்கள் அப்படி கேட்கலாம். ஆனால், நாம் அப்படி நினைக்க முடியுமா? 'கனவு காணுங்கள்' என்று சொல்லி தூங்கிக் கொண்டிருந்த நமது இளைஞர்கள் பலரை தட்டி எழுப்பியவர் நம்ம அப்துல் கலாம். இன்று அதேபோல, தமிழக இளைஞர்களின் கனவு நாயகன் பலரின் கனவு நாயகனாக இருப்பவர் மகேந்திர சிங் தோனி. அவர் ஒரு சாதாரண விளையாட்டு வீரர் என்றாலும், நாட்டுக்கு பல முறை பெருமை சேர்த்தவர் என்ற தகுதி அவரிடம் உள்ளது. அதைத் தாண்டி நமது இளைஞர்கள் தோனியை நேசிக்கின்றனர்.

சாம்பியன் பட்டம் வென்றால்
அப்படிப்பட்ட தோனி, தலைமை தாங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டு கோப்பை ஜெயிக்க வேண்டும் என்று நாம் கனவு காண்பதில் என்ன தவறு இருக்கிறது. அப்படிப்பட்ட இறுதிப் போட்டி, நம்மை கனவு காணச் சொன்ன அப்துல் கலாமின் பிறந்தநாள் அன்றே வருவது நமது தானே ஸ்பெஷல். அன்றைய தினம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றால் எப்படி இருக்கும்?. இப்போது சொல்லுங்க, இந்த ஆண்டின் ஐபிஎல் ஃபைனல் நமக்கு எவ்வளவு ஸ்பெஷல் என்று.


Click it and Unblock the Notifications