“தோனிக்கு அடித்த அதிர்ஷ்டம்”.. கடைசி ஓவரில் ரபாடாவுக்கு வாய்ப்பு தராதது ஏன்.. பண்ட் கூறிய விளக்கம்!
அமீரகம்: சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ஏன் ரபாடாவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற சர்ச்சை பரவி வருகிறது.
14வது ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணி ரிஷப் பண்ட், பிரித்வி ஷா மற்றும் ஹெட்மயர் ஆகியோரது சிறப்பான ஆட்டடத்தால் 172 ரன்களை குவித்தது.
இதன் பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

கடைசி ஓவர் சொதப்பல்
டெல்லி அணிக்கு தொடக்கம் சிறப்பாக தான் இருந்தது. தொடக்கத்திலேயே டூபிளெஸ்ஸிஸ் விக்கெட்டை சிஎஸ்கே இழந்தது. அதன் பிறகு கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் 2-வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். உத்தப்பா 63 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த ஷர்துல் தாகூர் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்கள் சரிய சென்னை அணிக்கு கடைசி இரு ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 19-வது ஓவரின் முதல் பந்தில் கெய்க்வாட்டும் ஆட்டமிழந்ததால் பதற்றம் நிலவியது.

அதிர்ச்சி தந்த கடைசி ஓவர்
19-வது ஓவரில் ஆவேஷ் கான்11 ரன்கள் விட்டுக் கொடுக்க,பின்னர் கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. 20-வது ஓவரை வீச அந்த அணியின் சிறந்த பவுலரான ரபாடா அழைக்கப்படுவார் என்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் பதற்றமடைந்தனர். ஆனால் எதிர்பார்காத வகையில் டாம் கரணுக்கு வாய்ப்பு கொடுத்தார் ரிஷப் பண்ட். முதல் பந்திலேயே மொயின் அலியை வீழ்த்திய அவர் நிச்சயம் 5 பந்துகளில் 13 ரன்களை கட்டுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதனை மாற்றி அமைத்தார் கேப்டன் எம்.எஸ்.தோனி தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை அடித்து சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

சர்ச்சை
இந்நிலையில் சர்வதேச அளவில் முன்னணி வீரராக இருக்கும் ரபாடாவை விட்டுவிட்டு, இளம் வீரரான டாம் கரணை ஏன் கடைசி ஓவருக்கு அழைத்தனர் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதற்கு ரிஷப் பண்ட் பதிலளித்துள்ளார். அதில், இந்த போட்டி நிச்சயம் எங்களுக்கு ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளது. என்னால் எதுவுமே பேச முடியவில்லை. கடைசி ஓவரில் தவறு செய்துவிட்டதாக கருதுகின்றனர். நான் டாம் கரணுக்கு வாய்ப்பு கொடுத்ததில் ஒரு முக்கிய காரணம் உள்ளது.

என்ன காரணம்
இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே டாம் கரண் சிறப்பாக பந்துவீசி இருந்தார். இருப்பினும் கடைசி ஓவரில் ரன்கள் கசிந்துவிட்டன. ஒரு போட்டியின் போது அன்றைய நாளில் எந்த பவுலர் சிறப்பாக பந்து வீசுகிறாரோ அவரையே கடைசி ஓவரில் பயன்படுத்துவோம். அந்த வகையில் தான் டாம் கரனுக்கு நான் கடைசி ஓவரை வழங்கினேன். முதலில் அவர் சிறப்பாக பந்து வீசினாலும் கடைசி ஓவரின் போது ரன்கள் சென்றுவிட்டன.

மீண்டும் வருவோம்
இது போன்று நடப்பது போட்டிகளில் சகஜமான ஒன்று தான். இந்த போட்டியில் செய்த தவறில் இருந்து நாங்கள் சில பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளோம். நிச்சயம் அடுத்த போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என ரிஷப் பண்ட் உறுதி கொடுத்தார்.


Click it and Unblock the Notifications