
நீடிக்கும் சிக்கல்
ஐபிஎல் தொடர் அக்டோபர் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. அது முடிவடைந்த அடுத்த இரண்டு நாட்களில் , அதாவது அக்டோபர் 17ம் தேதி முதல் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இதனால் அயல்நாட்டு வீரர்கள் அதற்காக திட்டமிட்டு வருகின்றனர். இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் வீரர்களுக்கு அனுமதி கொடுத்துள்ள போதும் வீரர்கள் இன்னும் குழப்பத்திலேயே தான் உள்ளனர்.

குழப்பத்தில் ஆர்சிபி
அந்தவகையில் ஆர்சிபி அணியில் தான் குழப்பம் அதிகமாக இருந்தது. ஏனென்றால் அந்த அணியில் நியூசிலாந்து வீரர்கள் ஃபின் ஆலன், ஸ்காட் குக்கெலிஜின் ஆகியோர் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேன் ரிச்சர்ட்ஸன், டேனியல் சாம்ஸ் மற்றும் ஆடம் சாம்பா என 5 அயல்நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை எனத் தெரிவித்துவிட்டனர். இதனால் அந்த அணி மாற்று வீரர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

அதிரடி மாற்றங்கள்
இந்நிலையில் அணி வீரர்களின் பட்டியலில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பதிலாக இலங்கை அணி வீரர் வானிண்டு ஹசரங்கா சேர்க்கப்பட்டுள்ளார். ஹசரங்கா சமீபத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியவர் ஆவார். அவரின் எகானமி 5.58 என்று சிறப்பாக உள்ளது.

2 இலங்கை வீரர்கள்
இதே போல நியூசிலாந்து அணியின் ஃபின் ஆலனுக்கு பதிலாக சிங்கப்பூரை சேர்ந்த டிம் டேவிட் ஆர்சிபியில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் டேனியல் சாம்ஸுக்கு மாற்றாக இலங்கையின் துஷ்மந்தா சமீரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் ஒரு இலங்கை வீரர்கள் கூட ஏலம் போகாத நிலையில் தற்போது 2 இலங்கை வீரர்களுக்கு வாய்ப்புகள் தேடிச் சென்றுள்ளது.

புதிய பயிற்சியாளர்
இந்த மாற்றங்களோடு நின்றுவிடாமல் அணியின் அதிகாரிகள் குழுவிலும் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சிமான் கட்டிச் விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் வெளியேறியதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக மைக் ஹெஸ்சன் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஆர்சிபி அணியின் இயக்குநராகவும் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த நடவடிக்கை
அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்களை வரும் ஆகஸ்ட் 21ம் தேதியன்று பெங்களூருவில் ஒன்றிணைய அறிவுறுத்தியுள்ளது. அங்கு அனைவரும் 7 நாட்கள் குவாரண்டைனில் வைக்கப்பட்டு 3 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் பின்னர் தனி விமானம் மூலம் ஆகஸ்ட் 29ம் தேதியன்று அமீரகம் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.

வலுவான அணி
இந்த வருட ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 5 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் உள்ளன. தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் மாற்றம் ஆர்சிபிக்கு எப்படி பட்ட பலனை கொடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











