
அகமதாபாத்தில் போட்டி
ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்றைய போட்டியில் மோதின. இந்த போட்டி ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 200வது போட்டி. இந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்திற்கு முன்னேற இரு அணிகளும் தீவிரம் காட்டின.

4 வெற்றிகள்
இதுவரை தொடரில் விளையாடியுள்ள 5 போட்டிகளில் இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வெற்றி கொண்டுள்ளன. இந்நிலையில் இன்றைய போட்டியில் ஆர்சிபி அணியின் டான் கிறிஸ்டியன் மற்றும் நவ்தீப் சைனிக்கு பதிலாக ரஜத் பட்டிதார் மற்றும் டேனியல் சாம்ஸ் சேர்க்கப்பட்டிருந்தனர். டேனியல் சாம்சின் அறிமுக போட்டி இது.

இஷாந்த் சர்மா சேர்ப்பு
இதேபோல கொரோனா காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து ஆர் அஸ்வின் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக இஷாந்த் சர்மா இணைக்கப்பட்டிருந்தார். இதனிடையே, இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆர்சிபி அணி பேட்டிங் செய்தது.

மாற்றத்தை ஏற்படுத்திய பனிப்பொழிவு
அகமதாபாத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் போட்டிகள் நடைபெற துவங்கியுள்ளன. முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கிடையில் பனிப்பொழிவு பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இரண்டாவதாக ஆடிய கேகேஆர் அணி ரன்களை அடிக்க திணறியது. இதேபோல பௌலிங்கிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி சொதப்பியது.

மாற்றம் குறித்து எதிர்பார்ப்பு
இந்நிலையில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையிலான இந்த போட்டியிலும் பனிப்பொழிவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரண்டாவதாக விளையாடும் அணி இதன்மூலம் பேட்டிங்கில் பிரச்சினையை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டது. இதையொட்டியே டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் போட்டியில் இடையில் மணல் சூறாவளி ஏற்பட்டது. இதையடுத்து பனிப்பொழிவு குறைவாக இருந்தது.

சிறப்பான பார்ட்னர்ஷிப்
இரண்டாவதாக களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஷிகர் தவான் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஏமாற்றம் அளித்தனர். ஆனால் மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக ரிஷப் பந்த் மற்றும் ஷிம்ரன் ஹெட்மயர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து அரைசதத்தை பூர்த்தி செய்தனர்.

1 ரன்னில் கைநழுவிய வெற்றி
வெற்றிக்காக அவர்கள் தங்களது அதிரடி போட்டியை அளித்தனர். மைதானத்தில் சிக்ஸ்களும் போர்களும் பறந்தன. ஹெட்மயர் 4 சிக்ஸ்களையும் 2 பவுண்டரிகளையும் அடித்திருந்தார். இதேபோல ரிஷப் பந்த் 6 பவுண்டரிகளை அடித்தார். ஆயினும் அவர்களது வெற்றிக்கனவு ஒரு ரன்னில் தகர்ந்தது. ஆர்சிபி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications











