ஓப்பனிங்
பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால், கே.எல்.ஜோடி முதல் ஓவர் முதலே டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக ஆட்டத்தில் மெரிவாலா வீசிய 2வது ஓவரில் மட்டும் 20 ரன்களை விளாசினர்.
ரன் குவித்த ஓப்பனர்ஸ்
சிறப்பாக ஆடிய இந்த ஜோடி 5 ஓவர்களில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தது. அதே போல் பவர் ப்ளேவின் முடிவில் 59 ரன்கள் சேர்ந்தது. இவர்களை பிரிக்க முடியாமல் திணறிய டெல்லி அணியின் பந்துவீச்சாளர் ரன்களை வாரி வழங்கினர்.
ஸ்மித் செய்த தவறு
இந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பால் டெல்லி அணிக்கு தலைவலி ஏற்பட்டதற்கு ஸ்மித் செய்த சிறிய தவறே காரணம். ஆட்டத்தில் மெரிவாலா போட்ட 2வது ஓவரின் 2வது பந்தை கே.எல்.ராகுல் தூக்கி அடிக்க முற்பட்டார். அப்போது வலையத்திற்கு நின்றிருந்த ஸ்மித் தன்னிடம் வந்த கேட்சை தவறவிட்டார். அவர் செய்த சிறிய தவறினால் இந்த பார்ட்னர்ஷி மிகப்பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.
சிறப்பான அடித்தளம்
இதே போல ஆட்டத்தின் 12வது ஓவரில் ஆவேஷ் காண் போட்ட பந்தை ராகுல் தூக்கி அடிக்க முயன்றார் அப்போது ப்ரித்வி ஷா கேட்சை விட்டார். ஆனால் அதற்கு அடுத்த ஓவரிலேயே டெல்லி அணி நிம்மதி பெருமூச்சு விட்டது. அதிரடியாக ஆடிவந்த மயங்க் அகர்வால் மெரிவாலா வீசிய பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் 36 பந்துகளில் 69 ரன்களை விளாசினார். இதனால் முதல் விக்கெட்டிற்கு அந்த அணி 122 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது.