சொதப்பிய ஆர்சிபி
டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர்களில் 138/7 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 39 (33) ரன்கள் சேர்த்தார். தேவ்தத் படிக்கல் (21), மேக்ஸ்வெல் (15), டிவிலியர்ஸ் (11) போன்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனால் அந்த அணியால் பெரிய ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்க முடியவில்லை.
கேகேஆர் வெற்றி
அடுத்துக் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஷுப்மன் கில் (29), வெங்கடேஷ் ஐயர் (26), நிதிஷ் ராணா (23), சுனில் நரைன் (26) போன்றவர்கள் சீரான வேகத்தில் ரன்களை குவித்ததால் கொல்கத்தா அணி 19.4 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் சேர்த்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் தோற்றதால், ஆர்சிபி அணியின் கோப்பை வெல்லும் கனவு தகர்ந்தது.
கோலி கடைசி சீசன்
விராட் கோலி கேப்டனாக செயல்படும் கடைசி ஐபிஎல் சீசன் இதுதான். இதில் கோப்பை வென்றுகொடுக்காததால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 2013ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி அணியின் நிரந்தர கேப்டனாக இருக்கும் விராட் கோலி, ஒருமுறை கூட கோப்பை வென்றுகொடுக்கவில்லை. இந்த வருடம் நிச்சயம் கோப்பையை வென்று கொடுப்பார் என்றுதான் அனைத்து தரப்பு ரசிகர்களும் உறுதியாக நம்பினார்கள். இருப்பினும், அது சாத்தியப்படவில்லை.
வைரல் வீடியோ
தான் 8 ஆண்டுகள் கேப்டனாக இருந்தும் ஒருமுறை கூட கோப்பையை வென்றுக்கொடுக்க முடியவில்லை என்ற வருத்தத்தில் கோலி நேற்று இருந்தார். அவர் சிரித்த முகத்துடன் இருப்பதாக தான் அனைவரும் பார்த்தனர். ஆனால் கோலி நேற்றைய போட்டி முடிந்த பிறகு தேம்பி அழுத வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சக வீரர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.