
மன அழுத்தம்
டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். பணிச்சுமை காரணமாக அவர் பதவி விலகுவதாக ட்விட்டரில் விளக்கமும் கொடுத்துள்ளார். ஆனால் டி20 போட்டிகளில் அவரின் கேப்டன்சி சரியில்லை என்பது தான் அவர் பதவி விலகுவதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.

ஐபிஎல்-லும் பதவி விலகல்
இது ஒருபுறம் இருக்க இந்தாண்டு ஐபிஎல் தொடருடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். நீண்ட நாட்களாக ஆர்சிபி அணிக்கு கேப்டனாக இருந்த கோலி, இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வென்றுக் கொடுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் வெற்றிகளை குவித்த போதும், முக்கியமான ப்ளே ஆஃப் சுற்றுகளின் போது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணி வெளியேறிவிடுகிறது. எனவே சற்று மன அழுத்தத்தை குறைப்பதற்காக பதவி விலகியிருந்தார்.

நடப்பாண்டே வெளியேறுகிறாரா?
இந்நிலையில் நடப்பு தொடரின் பாதியிலேயே விராட் கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு தொடரின் முதல் பாதியில் சிறப்பாக விளையாடியிருந்த பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருந்தது. ஆனால் அமீரகத்தில் தொடங்கிய முதல் போட்டியிலேயே அந்த அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

காரணம் என்ன
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் விளையாட வேண்டிய கோலி 4 பந்துகளில் 5 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினார். கோலியின் பேட்டிங் வழக்கத்தை விட மாறுபட்டு, மிகவும் சிரமப்படும் வகையில் இருந்தது. இதற்கு காரணம் அவருக்கு அழுத்தம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே கோலியை தற்போதே கேப்டன்சி பதவியில் இருந்து நீக்க ஆர்சிபி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூசகம்
இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஒருவர். கோலி விளையாடிய விதத்தை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை. அவரின் ஃபார்ம் மிக மோசமாக உள்ளது. எனவே பாதியிலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்படலாம். கொல்கத்தா அணியில் தினேஷ் கார்த்திக், ஐதராபாத் அணியில் வார்னர் ஆகியோர் தொடரின் பாதியிலே நீக்கப்பட்டுள்ளனர். எனவே கோலியையும் அப்படி நீக்கிவிடலாம் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications