
ரசிகர்கள் குழப்பம்
40 வயதாகும் தோனி, இந்தாண்டு கேப்டன்சி செய்துவிட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன்சியில் இருந்து மட்டும் விலகியுள்ளார். அதுவும் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே அறிவித்துள்ளார். கேப்டன் பதவியில் இருக்கும் போதே தோனி ஓய்வு பெற்றிருக்கலாமே என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

சிஎஸ்கே விளக்கம்
இந்நிலையில் இதற்கு சிஎஸ்கே தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள சிஎஸ்கே அணியின் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், தோனி கடந்த சில நாட்களாகவே யோசித்துக் கொண்டிருந்தார். ஜடேஜா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தற்போது உச்சத்தில் உள்ளார். நல்ல ஃபார்மில் இருக்கிறார். இந்த நேரம் தான் அவர் கேப்டன்சி பொறுப்பை ஏற்க சரியானது என தோனி முடிவெடுத்துள்ளார்.

கடந்தாண்டே முடிவானது
சென்னை அணியின் எதிர்காலம் குறித்து எப்போதுமே தோனி யோசித்துக்கொண்டே தான் இருப்பார். கடந்தாண்டே ஜடேஜாவிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டுவிட்டது. தோனிக்கு பின்னர் ஜடேஜா சரியாக இருப்பார். தோனியுடன் அவர் இருந்த அனுபவம், சிஎஸ்கே குறித்த புரிதல், ஆகியவையால் கடந்தாண்டே முடிவு எடுக்கப்பட்டு விட்டது.

கோலி விஷயம் போன்று தான்
தோனி அனைத்திற்குமே சரியான நேரத்தை பார்ப்பார். விராட் கோலியிடம் இந்திய அணியின் கேப்டன்சியை மிகவும் சுமூகமாக ஒப்படைத்தார். அதன்பின்னர் கோலியை சில ஆண்டுகள் மேம்படுத்தினார். தற்போதும் அதே நிலைமை தான். ஜடேஜாவிடம் கேப்டன்சியை ஒப்படைத்துவிட்டு, அவரை தயார் செய்யப்போகிறார். கடந்த 2012ம் ஆண்டு முதல் ஜடேஜா சிஎஸ்கேவில் உள்ளார். அவரின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ரெய்னாவின் ரியாக்ஷன்
அனைவரும் சுரேஷ் ரெய்னா தான் அடுத்த கேப்டனாக வருவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அவரை சிஎஸ்கே கழட்டிவிட்டது. எனினும் இதனை மனதில் வைத்துக்கொள்ளாத ரெய்னா, தனது ட்விட்டர் பக்கத்தில் " மிக மகிழ்ச்சியாக உள்ளது சகோதரரே, நாம் இருவரும் ஒன்றாக அந்த அணியில் வளர்ந்தோம். உங்களை தவிர அந்த அணியை எடுத்துச்செல்ல முடியாது. வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications