
ஐபிஎல் தொடர்
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் கொல்கத்தாவை மார்ச் 26இல் எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த சென்னை அணி 131 ரன்களை எடுத்த நிலையில், கொல்கத்தா 18 ஓவர்களில் அந்த இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 31ஆம் தேதி லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 210 ரன்களை எடுத்த போதிலும், அதை டிஃபென்ட் செய்ய முடியவில்லை. 19.3 ஓவர்களில் லக்னோ அணி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடுத்தடுத்த தோல்விகள்
இந்த அடுத்தடுத்த தோல்விகள் சென்னையின் புதிய கேப்டன் ஜடேஜாவுக்கு அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. இந்தச் சூழலில் சிஎஸ்கே இன்றைய தினம் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த மார்ச் 31ஆம் தேதி லக்னோ அணிக்கு எதிராக இதே மைதானத்தில் தான் சென்னை அணியால் 210 ரன்களை டிஃபென்ட் செய்ய முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் பிளேயிங் 11 இன்னும் முறையாக செட் ஆகவில்லை.

வேகப்பந்து வீச்சாளர்கள்
சென்னை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் பலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் சிஎஸ்கே சிக்கலான சூழ்நிலையில் உள்ளது. சிஎஸ்கே அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் ஏப்ரல் இறுதி வரை அணிக்குத் திரும்ப வாய்ப்பில்லை. கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஆடம் மில்னே காயம் அடைந்தார். அதேபோல கிறிஸ் ஜோர்டானும் டான்சில் நோயால் மருத்துவமனையில் அனுமதியாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சிக்கல்
இது சிஎஸ்கே அணிக்குச் சிக்கலைக் கொடுத்துள்ளது. ஏனென்றால் ஐபிஎல் போட்டிகளில் மற்ற அணிகளைப் போல சிஎஸ்கே அனுபவமற்ற அல்லது புதுமுக வீரர்களுடன் விளையாடுவது என்பது சிஎஸ்கேவின் பாணி இல்லை. பல ஆண்டுகளாகவே அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு சிஎஸ்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளது. ஆனால் பல்வேறு காயங்கள் காரணமாக இந்த ஆண்டு சிஎஸ்கே தனது பாணியை மாற்றி அமைக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. துஷார் தேஷ்பாண்டே மற்றும் முகேஷ் சௌத்ரி போன்ற அனுபவம் குறைந்த வீரர்களுக்கு சிஎஸ்கே ஏற்கனவே வாய்ப்பை அளித்துள்ளது. அதேபோல சற்று அனுபவம் வாய்ந்த சிவம் துபேவின் பெரியளவில் சோபிக்கவில்லை.

பிளேயிங் 11
இன்றைய தினம் ஜோர்டான் தேறினால் அணியில் இடம் பெற வாய்ப்புகள் அதிகம். அவரது வருகை டுவைன் பிராவோ மற்றும் பிரிட்டோரியஸுக்கு பக்கபலமாக இருக்கும். இருப்பினும் அவர் 100% ஃபிட்டாக இல்லை என்பதால் எதையும் உறுதியாகக் கூற முடியாது. அவரைத் தவிர கே.எம். ஆசிஃப் மற்றும் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களும் சிஎஸ்கேவில் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு பிளேயிங் 11இல் வாய்ப்பு கிடைப்பது கடினம்.

டாஸ் முக்கியம்
சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த முதல் இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்திருந்தது. மும்பையில் இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் சிஎஸ்கே தோல்விக்கு அது முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. லக்னோ ஆட்டத்திற்குப் பிறகு, சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் தான், 200+ ரன்களை எடுத்தும் கூட அதை டிஃபென்ட் செய்ய முடியவில்லை என்று பயிற்சியாளர் பிளம்பிங் தெரிவித்துள்ளார். எனவே, இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கியமானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











