சென்னை: பிளே ஆப் சுற்றின் குவாலிஃபையர் முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக குஜராத் அணி சார்பாக சாய் கிஷோர் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாட உள்ளது. இதுவரை இந்த இரு அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ள 3 போட்டிகளில், அனைத்திலும் குஜராத் அணியே வெற்றிபெற்றுள்ளது. இருப்பினும் குவாலிஃபயர் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளதால், சென்னை அணி ரசிகர்கள் சிறிய நம்பிக்கையுடன் உள்ளனர்.

ஆனால் சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையை பற்றி நன்கு அறிந்த ஏராளமான வீரர்கள் குஜராத் அணியில் உள்ளனர். ஏற்கனவே தமிழ்நாடு அணிக்காக சிறப்பாக ஆடி வரும் விஜய் சங்கர் குஜராத் அணிக்காகவும் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அதேபோல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சாய் சுதர்சன் எதிரணிக்கு ஒரு காட்டு காட்டிவிடுவார்.
அதுமட்டுமல்லாமல் சென்னை அணிக்காக நீண்ட ஆண்டுகள் விளையாடிய மோகித் சர்மாவை குஜராத் அணி வேறு மாதிரி டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக மாற்றிக் காட்டியுள்ளது. அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றிபெற வேண்டுமென்றால் தரமான 3 ஸ்பின்னர்கள் தேவை. ஏற்கனவே ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் 3 ஸ்பின்னர்களுடன் வந்ததால் தான் சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த முடிந்தது.
இதனால் ரஷித் கான் மற்றும் நூர் அஹ்மத் ஆகியோருடன் சாய் கிஷோர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சென்னை அணியுடன் நீண்ட ஆண்டுகள் பயணித்துள்ள சாய் கிஷோர், சேப்பாக்கம் மைதானத்தில் தான் கிரிக்கெட்டையே தொடங்கினார். இதனால் குஜராத் அணியின் வெற்றிக்கு சாய் கிஷோர் முக்கிய துருப்புச்சீட்டாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.
கடந்த சீசனிலும் குஜராத் அணி அவரை முக்கியப் போட்டிகளில் களமிறக்கி ஆச்சரியம் கொடுத்தது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் குஜராத் அணி சாய் கிஷோரை பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. நடப்பு சீசனில் ஒருமுறை கூட ஆடாத சாய் கிஷோரை சர்ப்ரைஸாக களமிறக்குவது சென்னை அணிக்கு பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கபடுகிறது.